ஈரத்தீ ( கோபிகை ) - பாகம் 52!!


அதிகாலை புலரும் முன்பே குளித்து தயாராகி வெளியே வந்த என்னைக்கண்ட எல்லோருக்குமே ஆச்சரியம் தான்.

பாமதி அக்கா , ஆட்டுப்பாலில் தேயிலைச்சாயம் கலந்த தேநீரோடு ஓடிவந்தா. 

மாமா இரவிரவாக தூங்கவே இல்லை என்பது அவருடைய சிவந்த விழிகளில் தெரிந்தது. 

பாவம் மாமா..

வயதான காலத்தில் எவ்வளவு துன்பம் அவருக்கு....

சிங்கள அரச மேலாதிக்கம் எப்படி எல்லாம் எங்களை வஞ்சிக்கிறது. என்ன மாதிரியெல்லாம் துன்பப்படுத்துகிறது...

நான் மனதில் நினைத்ததை சிவன் அண்ணா உரக்கவே சொன்னார்.

அப்போது கடகடவென பத்துப் பதினைந்து உந்துருளிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் வந்து இறங்கினார்கள்.

தேவமித்திரன் என்றால் அவர்களுக்கு அப்படி ஒரு பேரன்பு. அத்தனை பேருக்கும் நல்ல நண்பன் அவர். 

சோர்ந்து கிடந்த அவர்களின் முகக்குறிப்பில் அவர்களும் இரவுத் தூக்கத்தை தொலைத்த இருக்கிறார்கள் என்பது புரிந்தது. 

தேவமித்திரன்  சட்டத்தரணியாக மட்டுமல்லாது, இளம் தலைமுறையினரை ஒன்று திரட்டி பல்வேறு துறை சார்ந்த விடயங்களை அவர்களிடம் கொண்டு சேர்க்கிற ஒரு விரிவுரையாளராகவும் இருந்தார்.

தன் ஒவ்வொரு நொடிகளையும் மற்றவர்களுக்காக அர்ப்பணிக்கிற அவர் மீது யாருக்குத்தான் அன்பு இருக்காது?


வந்தவர்கள் "தேவா அண்ணாக்க்கு என்னவாம்?"  என்றனர் ஒன்றாக...

ஒரு தகவலும் இல்லை... இனித்தான் போகப்போறம்... என்றார் மேகவர்ணன் அண்ணா.


""உவங்களுக்கு சரியான பயம்...வேற ஒண்டும் இல்லை. ஏதோ ஒரு வகையில் தமிழ் மக்களைத் துன்புறுத்த வேணும் எண்டு கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறாங்கள். நாங்கள் எங்கட மக்களின்ரை ஆத்மார்த்தமான எண்ணங்களுக்காக எங்கட இளையோரின்ர விடிவுக்காக ஒண்டும் செய்ய ஏலாதே. 

அப்படிச் செய்தால் விசாரணை அது இதெண்டு  இவையள்  நடவடிக்கை எடுப்பினமாம்... இந்தக் கொடுமையை ஆரட்டச் சொல்லுறது..." 


" ஓம் தம்பி... இதெல்லாம் ஒரு விசயம் இல்லை...எங்கட இனத்தை ஒற்றுமைப் படுத்தி ஒரு குடைக்கு கீழ் கொண்டு வாறது அது ஒவ்வொருத்தருக்குமான காலக்கடமை. அதைத்தான் எங்கட தேவா செய்தவன். இவைகள் நினைக்கினம், இப்பிடி பயங்காட்டினால் சனம் ஒன்று சேராதெண்டு..." எனறு பாமதி அக்கா சொல்லவும் 

நான் தலையை ஆட்டினேன்.

"இதுக்கு எங்கட சில துரோகிகளும் தான் காரணம்... திட்டம் போட்டுத்தானே எங்கட இடங்களிலை போதைப்பொருளைப் பரவிடுறாங்கள். 2009 க்கு முதல் உது ஏதும் இருந்ததே தமிழர் பகுதிகளிலை, ஒண்டும் இல்லை. இப்ப ...

வீதியிலை ஆவெணாடு கொண்டு நிக்கிற பெடியளை நிமிர்ந்து பாக்க ஏலாது. கண் சிவந்து ஏதோ பேயறைஞ்ச பெடியள் மாதிரித்தான் நிக்குதுகள்.

அதை  விக்கிற எங்கட ஆக்களை என்ன சொல்லுறது...

வேரைப்பிடுங்கிக்கொண்டு போக மரம் முயற்சிக்கிறது போல இருக்கு இவையின்ரை நடவடிக்கை. இப்ப தெரியாது உந்த நாசகார வேலையின்ரை பாதிப்பு. வரலாறு ஒருநாளைக்கு, இனத்துரோகி எண்டு வெளிச்சம் போட்டுக் காட்டேக்க எல்லாம் விளங்கும். துரோகத்தால் ஐ தானே எங்கட தமிழ் மக்களின்ரை நிலைமை இப்பிடிக்கிடக்கு. விழுந்து போனோம் எண்டதுக்காக அப்பிடியே அந்த இடத்திலையே கிடக்க ஏலுமே...

எழும்பத்தானே வேணும்.... அதுக்கு துணிச்சல் உள்ள ஆக்கள் முன்னிற்கத்தான் வேணும்....தேவா தைரியமும் துணிச்சலும் உள்ளவன். அவனாலை எல்லாரையும் ஒன்றிணைக்க முடியும், நாங்கள் ஒற்றுமைப் பட்டால் ஒழிய இல்லாட்டி எங்களுக்கு விடிவு கிடைக்காது. எங்கட இனத்தநன்ரை விடியல் எங்கள் ஒவ்வோருத்தருக்குமானதுதானே..." 


"அதுசரி...சுதந்திரமான எங்கட செயற்பாடுகளை அவையள் ஒண்டும் செய்ய ஏலாது..." என்று பார்கவி கூறவும் தலையை ஆட்டினேன்.

கூடியிருந்த எல்லோருமே தங்கள் கருத்துகளைக் கூறினார்கள்.


இவை எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த மாமாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

என் மனதில் அரியணை போட்டு அமர்ந்திருக்ககற தேவமித்திரன் சாதாரண மனிதன் அல்ல. அவர் தன்னுடைய இன்த்தை அதன் ஆழத்தை அதன் வேர்களை தன்னுடைய உயிருக்கு மேலாக நேசிக்கிற ஆடவன் என்பதை உணர்ந்து பூரித்துப் போனேன்.

அவர் ஒரு காட்டாறு...என்னுடைய அன்பிற்காகவும் என்னுடைய காதலுக்காக வரும் அவரை அணை போட்டுத் தடுத்து விடக்கூடாது என்பதை அந்தக் கணத்தில் உணர்ந்து கொண்டேன்.

"நீதியையும் நியாயத்தையும் கதைக்கிறவர்களை இந்த அரசாங்கங்கள் கைது செய்து கொண்டுதான் இருக்கிறது. 

அதற்காக நாம் ஓய்ந்து விடமுடியாது..." பல்கலைக்கழக மாணவியான தங்கை  ஒருவர் கூற,

"அதுதான்.... இந்த விசயத்திலை நாங்கள் போராடித்தான் நியாயம் பெற வேணும் என்றால் போராடுவம்"  என்றனர் மற்ற இருவர்.

காலம் என்னிடம் ஏதோ ஒரு பெரிய சேதியைச் சொல்வது போல் உணர்ந்து கொண்டேன்.

"சரி... நீங்கள் எல்லாரும் இருங்கோ... நான் போய் பாத்திட்டு தகவல் சொல்லுறன்"  என்று எழுந்து கொண்டேன்.

என்னம்மா சமர்... நாங்கள் என்னத்துக்கு இருக்கிறம்...தனிய போறன் எண்டுறாய்... என்றார் மேகவர்ணன் அண்ணா கவலையோடு.

"அண்ணா இது...வேற பிரச்சினை... நீங்கள் அரச பணியாளர்... அதுதான்...நானும் வண்ணமதியும் அகரனும் போறம்"


"அதுக்கென்ன...என்ர உயிர் நண்பனம்மா அவன்... அவனுக்கு ஒரு துயரம் எண்டால். வேலை என்ன வேலை.... நான் மரக்கறி விந்தும் பிழைச்சுக்கொள்ளுவன்..."என்றார்.


"நான் வாறன் சமர்... நீங்கள் வாங்கோ..." என்று கூறிய சீலன் அண்ணா 

வர்ணன்...நீ இஞ்ச நில் , ஏதும் சிக்கல் எண்டால் இவையளோட வா..." என்றுவிட்டு பாமதி அக்காவின் அருகில் சென்று தன் மகனைக் கொடுத்து விட்டு, 

"பாத்துக்கொள்ளுங்கோ" என்றார்.

அந்த நேரத்தில் ஒரு இனிய கனவு எனக்குள் உருவானது.

ஆனால் நினைக்க நேரமின்றி நான் அவசரமாக எனது காரில் ஏறினேன். 












கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.