நட்சத்திர இசைத் திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும்!
கடந்த 2009ஆம் ஆண்டு, தனி ஈழம் கோரிக்கையை வலியுறுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும், சிங்கள பௌத்தவ பேரினவாத அரசுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்றது. சிங்களப் பேரினவாத அரசின் அறமற்ற அப்போரில் சுமார் 2.25 லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகளில் 40 ஆயிரம் மாவீரர்கள் கொலை செய்யப்பட்டனர்.
குறிப்பாக, மே 18ஆம் தேதி அன்று, தமிழ்நாட்டில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும், துக்க நாளை அனுசரிப்பதோடு, வீரமரணமடைந்த போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தி வருவது வழக்கமாகும்.
இச்சூழலில், கன்னியாகுமரி சிவந்தி ஆதித்தனார் கல்லூரி திடலில், நடிகர் விஷால் உள்ளிட்ட தமிழ் திரைப்பட நடிகர்களை வைத்து, மே 18 அன்று நட்சத்திர இசைத்திருவிழாவை நடத்த இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
மே 18 அன்று, ஒட்டுமொத்த தமிழர்களும் துக்க நாளை அனுசரித்து, தமிழிழீ போரில் உயிரிழந்த போராளிகள் மற்றும் தமிழிழீ தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற நிலையில், அந்நாளை இசைத்திருவிழாவின் வாயிலாக கொண்டாட்ட நாளாக மாற்ற முயலுவது ஏற்புடையது அல்ல.
ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டதை எதிர்த்து மே 18ஆம் நாளை தமிழ் இனப்படுகொலை நாளாக அறிவித்து, அதனை கனடா அரசு அனுசரித்து வருகிறது.
ஆனால், தமிழ்நாட்டில் அன்றைய நாளில் கொண்டாட்ட நிகழ்வை நடத்துவது வன்மையாக கண்டிக்கதக்கது.
எனவே, உலகத்தமிழர்களின் துக்க நாளான 18ஆம் தேதி அன்று கன்னியாகுமரியில் நடக்கும் நட்சத்திர இசைத் திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
கருத்துகள் இல்லை