ஆசிரியரின் பாலியல் சீண்டல்கள் தாங்க முடியாது தற்கொலை செய்த மாணவி!

 


கணித பாட ஆசிரியரின் பாலியல் சீண்டல்கள் தாங்க முடியாது தற்கொலை செய்துதகொண்ட 11ம் தர மாணவியின் நினைவுகளை மீட்டு அவரது சகோதரி முறையான ஒருவர் எழுதிய பதிவை பிரதி பண்ணி உங்கள் பார்வைக்கு தருகிறேன்.....


மிகவும் மனவேதனையோடு நான் இந்த பதிவை எழுதுகிறேன். இந்த பதிவை எழுதும்போது மிகவும் பயமும், இன்னும் ஏதோவெல்லாம் எனக்கு தோன்றுகிறது. இவ்வாறு ஒரு பதினாறு வயதுள்ள பெண் குழந்தை இவ்வளவு மனிதர்கள் வாழ்கிற இந்த உலகில் இருந்து மனமுடைந்து தனது மரணத்தை தேடிக்கொண்டது குற்றவுணர்சிக்கு உள்ளாக்குகிறது. டில்ஷி எனது சொந்த சகோதரியை போன்றவர். வாசிப்பின் மீதும், இந்த உலகத்தின் மீதும் அன்பு நிறைந்த குழந்தை அவள். இது தொடர்பில் நான் ஆரம்பத்தில் எழுதாமல் விட்டதற்கு காரணம் குடும்பத்தாரின் மனநிலையை கருத்தில் கொண்டு, இப்போது நான் எழுதுவது அவர்கள் அது தொடர்பில் நியாயம் வேண்டி நின்று நடந்த உண்மைகளை பகிர்வதால், நானும் எழுதுகிறேன்.


டில்ஷி அழகான, அன்பான தாய், தந்தையருக்குள்ள ஒரே குழந்தை, கொழும்பு இராமநாதன் இந்துக்கல்லூரியில் 11 வகுப்பில் கற்று வந்தார். அவர் கல்வியிலும், கலை சார்ந்த விடயங்களிலும் மிகவும் திறமையான பிள்ளை. அன்பான குழந்தை, வீட்டிலோ, உறவினர்களிடத்திலோ அவளுக்கு எந்த பிரச்சினையும் இருந்திருக்க வாய்ப்பில்லை. கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக அந்த குடும்பத்தில் உள்ள மனிதர்களை தெரியும். நல்ல அன்பான மனிதர்கள். அந்த குழந்தையும் அப்படித்தான். பூரண மனநலம் மிக்க திறமையான சகோதரி அவள்.


எங்கள் சகோதரிக்கு அவள் கல்வி கற்ற பாடசாலையின் கணித ஆசிரியர் அவளை பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கத்திற்கு உள்ளாக்கியுள்ளான். இந்த உலகத்தை மிகவும் நல்லது என நம்பிய எனது சகோதரிக்கு இது மிகப்பெரிய ஏமாற்றம். அவள் அந்த கொடூர நிகழ்வுக்கு பிறகு மிகவும் மனமுடைந்து போனாள். அன்பான, ஒழுக்கமான எந்த பெற்றோரால் வளர்க்கப்படும் எந்த பிள்ளையும் இந்த உலகம் இவ்வளவு அசிங்கமானது, தனக்கு படிப்பித்த ஆசிரியரே இப்படி செய்வார் என நினைத்திருக்க வாய்ப்பில்லை.


குறித்த சம்பவத்தை தொடர்ந்து அவளது பெற்றோர்கள் குறித்த ஆசிரியர் தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்த போதும், பாடசாலையின் அசட்டை போக்கு, துஷ்பிரயோகங்கம் செய்த, அந்த கேவலமான ஆசிரியரை பாடசாலையில் வைத்து பாதுகாத்ததோடு மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட பிள்ளையின் பக்கம் இல்லாமல், குற்றம் செய்தவனை ஆதரித்து எங்கள் சகோதரியின் மனம் வேதனையடையும் வகையில் தொடர்ந்து நடந்ததால், தனக்கு நடந்த கொடூரத்தை தாங்க முடியாமல் கடந்த இரு நாட்களுக்கு முன் ஐந்தாம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டாள்.


இது மிகவும் வேதனையான நிகழ்வு, இதுபோல பரவலாக நடந்தாலும் சட்டம் ஒழுங்காக இல்லாததால், இந்த சமூகம் ஒழுங்காக இவ்விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காததால் தொடர்ந்து டில்ஷி மாதிரியான வாழ வேண்டிய பெண்கள், தற்கொலை செய்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நிகழ்வு வேலியே பயிரை மேய்வது போன்றது.


நாங்கள் படித்த காலங்களில் தந்தை, சகோதரர் போன்ற சிறந்த ஆண் ஆசிரியர்களும் இருந்தார்கள். அதே நேரம் எங்களுக்கு தனியார் வகுப்பெடுத்த, சிலர் சிறிய குழந்தை என்றுகூட பார்க்காமல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்திய ஆசிரியர் இருக்கிறார்கள். அன்று அதை சொல்லக்கூடிய சூழல் எங்களுக்கு இல்லை. இன்று நான் அதை பகிர்கிறேன் Me too. எமது குழந்தைகள் நன்றாக வாழத்தானே இந்த உலகத்தில் எல்லாவற்றையும் உருவாக்கி வைத்துள்ளோம், பாடசாலை, பல்கலைக்கழகம், படிப்பு எல்லாமே, வாழவே பிடிக்காமல் அந்த குழந்தையை இப்படி இந்த சமூகம் தள்ளுமானால் நாங்கள் உருவாக்கி வைத்த எல்லாம் இறந்து விட்டன என்றே அர்த்தம். சில விசயங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியவை, அது போன்ற ஒன்று தானே காமம்கூட, அழகான ஒரு விசயம் இப்படி வன்முறையாக, அவளின் விருப்பம் இன்றி ஒரு பெண்ணின் மீது பிரயோகிக்க படும் போது அந்த குழந்தை எப்படி இந்த உலகை எதிர்கொள்ளும், பிள்ளைகளுக்காகதானே ஓடுகிறோம். யாரோ ஒரு பிள்ளை என ஒதுங்கி இருந்தால் நாளை உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கும் இதே நிலைதான். குழந்தைகள் நிம்மதியாக வாழ இந்த உலகத்தை உருவாக்கி கொடுங்கள்.


Justice for Dilshi ✊


பதிவு மூலம்: Raja Narmi

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.