கவிதை நூல் விமர்சனம்!!


நூல் விமர்சனம்


நானொரு காடோடி

கவிதைகள்

Shakthi Meenakshi  

சக்தி மீனாட்சி 

சுதைமண் பதிப்பகம்

86 பக்கங்கள்

120 ரூபாய்


காய்ந்த சருகு, வறண்ட நிலம், கானல் நீர் பாய்ந்து ஓடும் சாலை இப்படி வெறுப்பு பூக்கும் எதன் மேலும் ஆசை வர வைக்க கவிதை தேவை. அப்படியானால் ஆசை பூக்க வைக்கும் எதன் மேலும் காதல் வரவைக்க கவிதை இன்னமுமே தேவை. சராசரியாக அவற்றை கூறிச் செல்ல முடியாது. சக்தி மீனாட்சியின் கவிதைகள் இரண்டையும் செய்கின்றது.


தொகுப்பின் முதல் கவிதை கண்ணீர் என்ன செய்யும் என்ற கேள்விக்கு பதிலாகவும் பிரியமான ஒருவரின் அன்பை கொடுத்து பதிலாக எதையுமே பெற்றுக் கொள்ளாத ஒரு ஜீவனின் காதலை பேசுகிறது. கவிதையின் இறுதியில் வரும் "உன் விரல்களில் ஒட்டி இருக்கும் என் வண்ணம் உன் மீதி வாழ்வுக்கானது" என்பதில் இந்த கவிதை சிறப்பாக நிறைவு பெறுகிறது.

"உன்னைப் பிடித்திருக்கத் தேவையில்லை 

நமக்கிடையே பிரியமொன்றும்

இருந்திட வேண்டியது இல்லை 

நீ எதிர்பாலினம் என்பதும் என் பிரச்சனை இல்லை 

நீ கதறியழுவதை நான் பார்த்திட நேர்ந்தால் 

இறுக்கியணைத்து முன்னுச்சியில் முத்தமிட்டு 

சற்றே இளைப்பாறத் தோளில் சாய்த்து 

நீ ஆசுவாசமான பிறகு 

யாதென்றும் நிகழாதது போல 

ஒரு பட்டாம்பூச்சி என 

விட்டுப் பறந்திடத் தெரியும் எனக்கு

உன் விரல்களில் ஒட்டி இருக்கும் 

என் வண்ணம் உன் மீதி வாழ்வுக்கானது".


கவிதையில் கதைகளைச் சொல்கிறார் சக்தி மீனாட்சி. சந்துரு அண்ணன் போல ஒரு அண்ணன் யாருக்கும் அமைந்தாலும் அவர் பேயாக இருந்தால் என்ன பிசாசாக இருந்தால் என்ன என்று ஏங்க வைத்து விடுகிறார் 

"என்னைப் போல தான்டா இருக்கும் என புன்னகைத்துப் பதில் சொன்னான். அன்றிலிருந்து நான் பேய்களை நேசிக்கிறேன்" என்பதாக முடியும் கவிதையில்.


பால்ய காலத்தில் நடக்கும் ஒவ்வொன்றும் நினைவில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சில விஷயங்கள் எப்பொழுதும் மனதை விட்டு அகலாது. காலங்கள் பல கடந்தாலும் அந்த சம்பவங்கள் பசுமரத்தாணி போல பதிந்து விடும். அதைப் போல ஒன்று,

"கணக்கு டீச்சரின் 

மேசைக்குள் போட 

பாம்புக் குட்டி கேட்ட நாளில் தான் 

என் மீதான காதலை நீ 

கைவிட்டிருக்க வேண்டும்". பள்ளியில் டீச்சரிடம் தன்னுடைய வில்லத்தனத்தை காட்டுமிடத்தில் கைவிட்டுப் போன காதல் நினைவில் வந்து நிற்கிறது.


"திருத்திக் கட்ட 

திண்ணையை இடித்தேன் 

உறுப்பிழந்து ஊனமானது 

வீடு"

இதுபோல கவிதைகள் ஓராயிரம் வந்தாலும் இக்கவிதையில் வருவது போல உறுப்பிழந்து ஊனமானது வீடு என்பதில் கவிதை தன்மை வந்து விடுகிறது. அதே சமயம் திண்ணையை இடித்த வலி என்பதும் கண்முன் நிழலாகத் தொடர்கிறது.


ஊரில் உள்ள எல்லோருக்கும் பஞ்சாயத்து வைத்து பைசல் செய்து விடுவார். ஆனால் தன்னுடைய பிரச்சனைக்கு மட்டும் எந்த தீர்வும் இன்றி அல்லாட விடுவார். இதற்கு காரணம் அந்தப் பிரச்சனையே தன்னால்தான் என்பதை உணராத நபராக அவர் இருப்பது தான். கவிதையின் கடைசியில் வருகிற "உன் காலடியில் விம்முகிற முத்தம் குறித்து ஏதும் அறிவாயா" என்ற வரியில் தான் அந்த பிரச்சனைக்கு உரிய நபர் முக்கியத்துவம் பெறுகிறார்.

"முத்தம் குறித்து 

விதவிதமாய் விவரிக்கிறாய் 

பறக்கும் முத்தம் 

மிதக்கும் முத்தம் 

ஏங்கும் முத்தம் 

தேங்கும் முத்தம் 

எத்தனை எத்தனை 

காற்றில் கலந்து வரும் 

முத்தம் பற்றி சிலாகிக்கிறாய் 

உன் காலடியில்  விம்முகிற முத்தம் குறித்து ஏதும் அறிவாயா?". 


கடல்புறத்தில் வலை நெய்து கொண்டிருந்தவளிடம் ஒரு கதை சொல் என்றேன் இப்படித்தான் அந்த கவிதை தொடங்குகிறது.  அவளிடம் நதியின் கதையும் கடலின் கதையும் வேண்டும் என கேட்க அவள் கூறுகிறாள். எப்படி?

சிப்பி ஒன்றையும் கூழாங்கல் ஒன்றையும் கையில் கொடுத்து காதோடு வைத்து மௌனமாக காத்திரு. கதையொன்று கேட்பாய். அது உன் வாழ்வுக்கானது என சொல்லிவிட்டு கடக்கிறாள் அவள். அதுதான் கடல் கதை. அதுதான் நதிக்கதை. சிறப்பாக கவிதை எனவும் கதை எனவும் கூறும் வண்ணம் அழகாக அமைந்திருக்கிறது.


அன்பு வைக்கத் தொடங்கி விட்டால் அது எந்த ஜீவன் மேல் இருக்கிறது?  

இந்த வாழ்வு கசந்து விட்டது. இந்த வாழ்வு இனி வாழப்போவதில்லை. இந்த வாழ்வில் எது எது பாக்கியோ அத்தனையையும் ஒப்படைத்து விட்டு வாழ்வுமுடித்து செல்வதற்கு தயாராகிவிட்டது. ஏறக்குறைய வாழ்வின் அனைத்தையும் பூர்த்தி செய்து உயிலெழுதி வைத்தாயிற்று. கடைசியாகத்தான் பார்க்கிறாள், தன் காலடியில் இருக்கிற பூனைக்குட்டியை. இனி என்ன செய்ய பால்காரர் வரும்வரை காத்திருக்க வேண்டும். பூனை பசியாற வேண்டும் என்று கவிதையின் வழியாக தன் மனதை பதிவு செய்கிறார் சக்தி மீனாட்சி.

"கண்களில் நீர் கசிய கடிதமெழுதுகிறேன் 

வங்கிக் கடன் முதல் 

மளிகைக் கடன் வரை 

அத்தனையும் அடைத்தாயிற்று

யாரும் காரணம் இல்லை என

குறிப்பும் எழுதி ஆயிற்று உடைமைகளைப் பிரித்து 

உயில் வரைந்தாயிற்று 

வந்த லவ் யூக்களுக்கும் 

வராத மிஸ் யூக்களுக்கும் 

பதில் அனுப்பியாயிற்று 

இனி ஒரு நொடியும் வாழ முடியாது

எனக் கடிதத்தை முடித்து

முற்றுப்புள்ளி இடுகையில் தான் கவனித்தேன் 

காலடியில் உறங்கும் பூனைக்குட்டியை 

இனி பால்காரர் வரும் வரை காத்திருக்க வேண்டும்"


கோவிலில் ஆடு, சேவல் பலியிட பார்த்திருப்போம். பலியிடுபவனின் மனது எப்படி இருக்கும் என்பதனை இரு வரிகளில் ஒரு கவிதையின் நிறைவில் கூறுகிறார். 

"நீங்கள் அதன் தந்தை 

நீங்கள் தரப்போவது

கருப்பனிடம் மன்னிப்புக் கேட்டு

ஒரே ஒரு துளிக் கண்ணீர்".


குப்பை வண்டி ஓட்டி செல்லுபவனை இராஜகுமாரன் என்ற பெயரிட்டு அழைப்பதை நாமும் சேர்ந்து கைதட்டி வரவேற்கலாம். வீட்டில் சிறு பறவை பூனைக்கு அஞ்சி வளரும். ஆனால் காட்டில் சிங்கம், புலி, சிறுத்தை, நரியோடு சேர்ந்து வாழும் என்பதையும் ஒரு கவிதை ஆக்கி உள்ளார்.


"சிறு புன்னகை 

என்ன செய்யும்? மழைத்துளி செய்யும்

அத்தனையும்

செய்யும்"

கவிஞர் சக்தி மீனாட்சி சிறு புன்னகை என்றால் நெஞ்சுக்குள்ள முடியும் அவர் மழைத்துளி அவர் பெருமழைதரும் வல்லமை மிக்கவர். கவிதைக் காடு அவரை வரவேற்கிறது. நானொரு நாடோடி என்பதும் பொருந்தும். நானொரு காடோடி என்பதும் பொருந்தும். அத்தனை விசயங்களை இத்தொகுப்பின் மூலம் பதிவு செய்திருக்கிறார். வாழ்த்துக்கள் தோழர்.


யாழ் தண்விகா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.