மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம் மீள இயங்கும்!📸
மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம் மீள இயங்கும் – அமைச்சர் மற்றும் ஆளுநர் பங்கேற்புடன் முக்கிய தீர்மானம்.
மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள செயற்படுத்தும் முயற்சியாக, 2025 ஜூன் 14ஆம் திகதி, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், கடற்றொழில் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான கௌரவ இ. சந்திரசேகரன் மற்றும் இணைத்தலைவருமான வடமாகாண ஆளுநர் கௌரவ நா. வேதநாயகன் ஆகியோரின் தலைமையில் நேரில் பார்வையிட்டு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இந்த வருகையில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், யாழ் மாவட்டச் செயலர் ம. பிரதீபன், சாவகச்சேரி பிரதேச செயலர், சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர், மாகாண மற்றும் மாவட்ட விவசாயத் திணைக்களப் பணிப்பாளர்கள், மற்றும் பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை பெற்ற வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
பன்றித்தலைச்சி அம்மன் கோயில் அருகிலுள்ள மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், அமைச்சர் இ. சந்திரசேகரன் உரையாற்றியபோது, கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் மத்திய நிலையத்தை மீள இயக்கும் தீர்மானம் ஏற்கப்பட்டதாகவும், தற்போது அதற்கான நடைமுறையை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும், இலங்கையின் ஏனைய பொருளாதார மத்திய நிலையங்களை விட, மட்டுவிலில் அமைந்துள்ள இந்த மையம் மிகச் சிறப்பான இடத்தில் அமைந்துள்ளதாகவும், எதிர்கால வளர்ச்சிக்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
வியாபாரிகள், தாங்கள் முற்பணத்தை வழங்கியிருந்தும் இதுவரை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவில்லை என்ற வருத்தத்தையும், அடிப்படை வசதிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டிய தேவையையும் முன்வைத்தனர். குறிப்பாக விவசாயிகள் மற்றும் தென்பகுதி வியாபாரிகள் இப்பகுதியை நோக்கி வரக் கூடியபடி சூழலை உருவாக்க வேண்டும் என்றும் கோரினர்.
இதனிடையே ஆளுநர் நா. வேதநாயகன், விவசாயிகளுக்கு தேவையான கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்றும், பராமரிப்பு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சேகரிப்பு நிலையங்கள் அமைப்பதன் மூலமும் மத்திய நிலையத்துக்கான ஆதரவு வலுப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறினார்.
இந்நிகழ்வின் முடிவில், பொருளாதார மத்திய நிலையத்துக்கான நிர்வாகக் குழு புதுப்பிக்கப்பட்டதுடன், நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க அதிகாரிகள் உறுதி வழங்கினர். அமைச்சர் சந்திரசேகரனும், மத்திய நிலையம் மீளச் செயல்படுவதற்கான ஒத்துழைப்புகளை வழங்க தயாராக இருப்பதாக உறுதிபூர்வமாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை