தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம்!📸

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இன்றைய தினம் (13) போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 


இவ் போராட்டமானது வைத்தியசாலை நிர்வாகி வைத்தியர் தேவநேசனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளது. போராட்டத்தில் வைத்தியசாலை மருத்துவர்கள், பொதுமக்கள் மற்றும் மருத்துவ தொழிற்சங்கத்தினர் கலந்திருந்தனர். 


இவ் போராட்ட த்தின் போது எங்கள் வைத்தியசாலையை மீட்டு எடுப்போம், புற்று நோய் பிரிவை காப்பாற்றுவோம்.எனும் கோசங்களுடன் போராட்டம் இடம்பெற்றிருந்தது.

அத்துடன் போரட்டக்காரர்களினால் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் இவ்விடயத்தினை கவனத்தில் கொண்டு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கடிதம் ஒன்றையும் கையளித்யுள்ளனர்.


மேலும் அக் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது..


மாண்புமிகு ஜனாதிபதிக்கு ,


ஐயா , 


தெல்லிப்பளை வைத்தியசாலையின் நிர்வாகச் சீர்கேடுகள் தொடர்பானது


யாழ் மாவட்டப் பொதுமக்களாகிய நாங்கள், மகத்தான சேவையாற்றி வரும் எங்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அண்மைக்காலமாக நடந்து வருகின்ற நிர்வாக ரீதியான முரண் நிலைகள் , உட் பூசல்கள் மற்றும் புற்றுநோய்ப் பிரிவின் நடமாடும் வைத்திய தெய்வமாகக் கருதப்படும் வைத்திய நிபுணர் கிரிஷாந்தி அம்மையாருக்கு எதிராக முன்வைக்கப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பொதுமக்களாகிய நாங்கள் இன்று ஒன்று திரண்டு கையெழுத்து வேட்டை ஒன்றை ஆரம்பித்து தங்களுக்கு பின்வரும் விடயங்களைத் தெரியப்படுத்த விழைகின்றோம்.


* தெல்லிப்பளை மண்ணின் புகழ் பூத்த எங்கள் வைத்தியசாலை போர் மற்றும் இடப்பெயர்வுகளின் பின்னர் 2012 ஆம் ஆண்டிலிருந்து புதிய இடத்தில் இயங்கத் தொடங்கியது. குறுகிய காலத்தில் துரித வளர்ச்சி அடைந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு அடுத்ததாக வட மாகாண மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற வைத்தியசாலையாகத் தன்னைத் தரமுயர்த்தி இன்று வரை மிடுக்கோடு விளங்குகின்றது.

விசேட பிரிவுகளாக மனநல மருத்துவப் பிரிவு மற்றும் புற்றுநோய்ப் பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டு வட மாகாண மக்களுக்கு அளப்பெரும் மருத்துவப் பணியை ஆற்றி வரும் மகத்தான வைத்தியசாலையாக விளங்குகின்றமை யாவரும் அறிந்த ஒன்றாகும்.


* கடந்த இரண்டு வருடங்களாக வினைத் திறனற்ற வைத்தியசாலை நிர்வாகியின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக எமது வைத்தியசாலை பல்வேறு நிர்வாகச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றது. அத்துடன் வைத்தியசாலை ஊழியர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலையே காணப்படுகின்றது. இது தொடர்பாக மாகாண மற்றும் மத்திய சுகாதார உயர் மட்டங்களுக்குத் தெரியப்படுத்திய நிலையிலும் இன்று வரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.


* எங்கள் வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு வைத்தியர் கிரிஷாந்தி அம்மையார் எம் மக்களால் நடமாடும் வைத்திய தெய்வமாகக் கருதப்படுகின்ற ஒருவர். தன்னலம் கருதாமல் வைத்தியசாலைக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த இவர் மீது தனிப்பட்ட காழ்ப் புணர்வுகளால் வைத்தியசாலை நிர்வாகம் தேவையற்ற அவதூறுகளைத் தொடர்ச்சியாகத் திட்டமிட்டுச் சுமத்தி வருகின்றது. எவ்வித ஆதாரங்களுமற்ற வகையில் அவரது நற் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நிர்வாகப் பிரிவினர் செயற்பட்டு வருகின்றனர். இதனால்

புற்றுநோய்ப் பிரிவும் அங்கு சேவையாற்றும் சேவை நோக்கம் கொண்ட புற்றுநோய் வைத்திய நிபுணர் கிருஷாந்தியும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் தொடர்ச்சியான நிர்வாக ரீதியான முட்டுக்கட்டைகளையும்

சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். 


* வைத்தியசாலையின் நிர்வாக ரீதியான முரண் நிலைகளால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்கள் ஆகிய நாங்களே. இதனால் இன்றைய தினம் பொதுமக்கள் ஆகிய நாங்கள் ஒன்றிணைந்து கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டு இவ்விடயம் தொடர்பாகத் தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.


* நீண்ட நாட்களாக இப் பிரச்சனை முடிவுக்கு வராத காரணத்தால் வைத்திய நிர்வாகி தேவநேசனுக்கு எதிராக முன் வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் எதிராக உடனடியாக விசாரணைக் குழுவை நியமிப்பதுடன், புற்றுநோயாளர்களுக்குரிய தரமான இலவச சிகிச்சை அளிப்பதில் செயற்கையாக இடப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை நீக்கி வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் இதர சுகாதார ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பான சூழ்நிலையில் சேவையாற்றுவதற்கும் ஏதுவான வகையில் நிர்வாக மாற்றத்தை ஏற்படுத்தி தெல்லிப்பளை வைத்தியசாலையின் சுமூக நிலைக்கும் வடமாகாண மக்களின் 

நியாயமான கோரிக்கைக்கும் தாங்கள் உடனடியாக தங்களின் கவனத்திற்குக் கொண்டு வந்து இதற்குரிய உடனடித் தீர்வுகளைப் பெற்று தர வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றோம்.


 "எங்கள் வைத்திய சாலையை மீள மீட்டெடுப்போம் - புற்றுநோய்ப் பிரிவைக் காப்பாற்றுவோம் "

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.