சுபாஷினிக்கு உடுமலை கௌசல்யா வேண்டுகோள்!
நீ கவினின் காதலுக்கு நேர்மையாக இருப்பாய் என்பதை உணர்வேன். கவினின் உயிருக்கு விடை எடுத்தாக வேண்டும். கவினுக்காக மட்டுமல்ல, கவின்களுக்காகவும் உன்னிடம் இறைஞ்சுகிறேன்'' என நெல்லை சுபாஷினிக்கு உடுமலை கௌசல்யா வேண்டுகோள் வைத்துள்ளார்.
தூத்துக்குடியை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் கவின் (27) காதலியின் தம்பியால் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த வழக்கில் கைதாகியுள்ள கொலையாளி சுர்ஜித், '' பட்டியல் சமூகத்தை சேர்ந்த கவின் தனது அக்காவை காதலிப்பது எனக்கு பிடிக்கவில்லை, அதனால் கொன்றேன்'' என போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் கண்டனங்களையும், கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆணவக் கொலையால் கணவனை இழந்த உடுமலை சங்கரின் மனைவி கௌசல்யா, கவினின் காதலிக்கு முகநூலில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
உடுமலை கௌசல்யாவின் முகநூல் பதிவு;
'தோழி சுபாஷினிக்கு,
வணக்கம். நான் கெளசல்யா எழுதுகிறேன். முதலில் எனது வேண்டுகோள்: என்ன ஆனாலும் நீங்கள் கவின் பக்கம்தான் நிற்க வேண்டும்!
இங்கு கொலையுண்டு கிடப்பது நீங்கள் நேசித்த, கரம் பிடித்த, கை கோர்த்து நடந்த காதலன்! நீங்கள் அழைத்ததற்காகத்தான் கவின் உங்கள் தம்பியிடம் பேச சென்றிருப்பான்! கவினுக்கான நீதியின் பக்கம் நீங்கள் உறுதியாக நிற்க வேண்டும்! அப்படிச் செய்தால் என் வாழ்க்கை என்ன ஆகும் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். அதை என்னால் புரிந்து கொள்ள இயலும்.
நான் என் சங்கரை இழந்த பின்பு யாரும் இல்லாத அனாதை போலவே நின்றேன். ஒவ்வொரு பெரியாரிய அம்பேத்கரியத், மார்க்சிய தோழர்களும் அவர்களின் பிள்ளையைப் போல என்னை அரவணைத்துக் கொண்டனர். இன்று வரை (10 ஆண்டு ஆகப் போகிறது) சாதியைத் தூக்கிப் பிடித்த குடும்பத்துடன் எந்த உறவும் இல்லாமல் என்னால் வாழ முடிகிறது. அதற்குத் தோழர்கள் என்னை தங்கள் மகளாக பார்த்து கொண்டு என் சுயமரியாதையுடன் சொந்த காலில் நிற்க இன்று வரை உடன் இருக்கின்றனர்.
எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் நீதியின் பக்கம் என் காதலின் பக்கம் என்னால் உறுதி குலையாது வாழ முடிகிறது. காரணம், சங்கரின் வழக்கில் எந்த இடத்திலும் நான் பொய் சொல்லவில்லை. சமரசம் இப்போது வரை செய்து கொள்ள வில்லை. இனியும் செய்து கொள்ள மாட்டேன். நான் தொடக்கத்தில் சந்தித்த நெருக்கடிகள் பெரிது. என்னைப் போல உன்னையும் சாதி வெறியர்கள் பற்றிக் கொள்வார்கள். எவராக இருந்தாலும், என்ன அழுத்தம் தரப்பட்டாலும் உன் கவினுக்காகத் துணிவோடு நில். உன் பக்கம் நான் இருக்கிறேன்; நாங்கள் இருக்கிறோம். நடந்ததை அப்படியே சட்டத்தின் முன் சொல்ல வேண்டும்.
நீ கவினின் காதலுக்கு நேர்மையாக இருப்பாய் என்பதை உணர்வேன். கவினின் உயிருக்கு விடை எடுத்தாக வேண்டும். கவினுக்காக மட்டுமல்ல, கவின்களுக்காகவும் உன்னிடம் இறைஞ்சுகிறேன். தோழி! எல்லாவற்றையும் தாண்டி நான் இருக்கிறேன். கவினின் நீதிக்கு நானும் உன்னோடு இணைந்து கொள்கிறேன். வா! எதற்கும் அஞ்சாதே! உன்னைத் தாங்கிக் கொள்ள நான் இருக்கிறேன்; நாங்கள் இருக்கிறோம்!'' என இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை