உதவியை சாகும் வரை நிறுத்த மாட்டேன்- KPY பாலா உறுதி!

 


என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விளக்கம் அளிப்பேன் என பாலா தெரிவித்துள்ளார்.நகைச்சுவை நடிகரும் தொலைக்காட்சி பிரபலமுமான KPY பாலா, தனது சமூக உதவிகளை இறுதி மூச்சு வரை தொடருவேன் என்று உறுதியளித்தார். சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவில் பங்கேற்ற அவர், வாசலில் அமரவைக்கப்பட்டிருந்த ஒரு மாற்றுத்திறனாளியை சந்தித்து, தன்னிடமிருந்த பணத்தை அவருக்கு அளித்து உதவினார். இந்த நிகழ்வு, அவரது மனிதநேயத்தையும், மக்களுக்கு உதவும் அர்ப்பணிப்பையும் மீண்டும் வெளிப்படுத்தியது.


நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது, ஊழியர்கள் வாசலில் அமரவைத்திருந்த மாற்றுத்திறனாளியை கவனித்த பாலா, உடனடியாக அவரிடம் சென்று உரையாடி, தனது கையில் இருந்த பணத்தை அன்புடன் வழங்கி வழியனுப்பினார். இந்த எளிமையான செயல், பாலாவின் இயல்பான உதவி மனப்பான்மையை பறைசாற்றியது. இதற்கு முன்பும், அவர் மாற்றுத்திறனாளிகள், ஏழைகள் உள்ளிட்ட பலருக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான்.


இதுவரை அவருடைய பெயர் எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்த நிலையில், சமீபத்தில் அவருடைய பெயர் விமர்சனத்தில் சிக்கியது. அது என்னவென்றால், பத்திரிகையாளர் உமாபதி என்பவர் பாலா பின்னாடி யாரோ இருப்பதாகவும் அவர் சர்வதேச கைக்கூலி என்றும் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து அதற்கு விளக்கம் கொடுத்து பாலா வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.


அதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாலாவிடம் செய்தியாளர் ஒருவர் உங்கள் மீது எழுந்த விமர்சனங்களால் நீங்கள் செய்யும் உதவிகளை நிறுத்துவீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் “நான் செய்யும் உதவிகளை சாகும் வரை நிறுத்த மாட்டேன். என்னிடம் இருப்பதை கடைசி வரை கொடுத்துக்கொண்டே இருப்பது தான் என் வேலை. இந்தப் பணி முடிவே இல்லாமல் தொடரும்,” என்று உணர்ச்சியுடன் கூறினார்.


மேலும், தன்மீது எழுந்த சில விமர்சனங்களைப் பற்றி பேசிய அவர், “என்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விளக்கம் தருவேன்,” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.