மண் கலந்த கவிதை நீயடி..!!

 


தேசக் கனவோடு

நெடுங்கடல்

மடி தழுவிய சங்கவியே! 


விடலைப் பருவத்தில்

படலை திறந்து

கனலிடை சமராடிய

சூரியப் புதல்வி -நீ 


போர்தொடுத்து வந்தாரை

நேர் நிறுத்தி

மார்பினில் குண்டேந்தி

தாய் மண்ணிலே விதையானாய் 


உன்னை 

நினைக்கின்றபோது

எம் விழித்திரையில் 

நீர் வழிகின்றது

மொழியற்று நிற்கின்றோம் 


எப்போதும்

கலகலப்பாய் இருப்பவளே

சிரிப்பூட்டும் 

உன் பேச்சினில் -நாம் 

மகிழ்ந்திருந்த நாட்களே அதிகம் 


அமுதசுரபியில்

முழங்கிய உன் குரல்

அடங்கிப் போனது

வணங்கா மண்ணோடு 


ஈழமறவர் வரிசையில்

மீளாத்துயில் கொள்ளும்

சுடுகலன் ஏந்திய 

ஏந்திழையே 


நெஞ்சிலே நஞ்சோடு

சாவுக்கு மஞ்சம் போட்டு

உடலை தனலாக்கி

ஞாலத்தில் 

வரலாறாகியவளே


மண் கலந்த கவிதை நீயடி..❣️


#பிரபா அன்பு

@highlight

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.