ஒன்று கூடிய சாரதிகள்!!


 எல்ல சுற்றுலா வலயத்திற்கு வரும் PickMe மற்றும் Uber டாக்ஸி சாரதிகள் மீது உள்ளூர் டாக்ஸி சாரதிகள் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சாரதிகள் எல்ல பகுதியில் ஒன்றுகூடியுள்ளனர்.

எல்ல பகுதிக்கு வரும் PickMe, Uber சாரதிகள் அச்சுறுத்தப்படுவதாகவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் பொலிஸாரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, பெண் சாரதி ஒருவர் தாக்கப்பட்டு அவரிடமிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சக சாரதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கவும், குற்றவாளிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பெரும் எண்ணிக்கையிலான PickMe, Uber சாரதிகள் எல்லவில் திரண்டனர்.

இது ஒரு போராட்டம் அல்ல எனவும் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தும் செயலென அவர்கள் குறிப்பிட்டனர்.

எல்ல பகுதியில் இத்தகைய செயலிகளில் ஈடுபட வேண்டாம் என  பொலிஸ் அதிகாரிகள் சாரதிகளுக்கு அறிவுறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பண்டாரவளை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.