இலவச சேவையில் இடம்பெற்ற மோசடி!!


காரைநகர் - ஊர்காவற்றுறை கடற்பாதைச் சேவையில் பணியாற்றும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணியாளர் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடற்பாதையில் பயணித்த மூவரிடம் பணம் பெற்றுக்கொண்டபோது, சமூக செயற்பாட்டாளர்களிடம் வசமாக சிக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவர்கள் குறித்த நபரை எச்சரிக்கை செய்ததையடுத்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊழியர் பணத்தை திருப்பிக் கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி கடற்பாதைச் சேவையானது அரச நிதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் இயக்கப்படும் இலவச சேவையாகும்.

எனினும் இப்பாதையில் ஏற்றிச் செல்லப்படும் வாகன சாரதிகளிடம் பணியாளர்கள், அவ்வப்போது நிதி வசூலிப்பதாக சாரதிகள் தரப்பில் இருந்து தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன், பாதையில் பயணித்த மூவரிடம் பணியாளர் ஒருவர் 250 ரூபாவை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதையில் பயணித்த சமூக செயற்பாட்டாளர்கள் இருவர் இதை அவதானித்து அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதன்போது குறித்த பயணிகள் சந்தோச முறையில் பணம் வழங்கினர் என அவர் மழுப்பலாக பதிலளித்துள்ளார். ஆனால் பணம் கொடுத்த பயணிகள் இதற்கு முன்னரும் தாம் பாதையில் பயணித்த போது பணியாளர்களில் ஒருவர் தங்களிடம் பணம் பெற்றுக்கொண்டனர் எனத் தெரிவித்தனர்.

மேற்படி பாதைச் சேவையானது நீண்ட காலமாக இதுபோன்ற குளறுபடிகளுடனேயே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.