ஈரானை தாக்கட்டுமா?


 ஈரானை தாக்கட்டுமா? பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரின் மூக்கை உடைத்து அனுப்பிய சவுதி 'பிரின்ஸ்'



சவுதி அரேபியா மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் சவுதி அரேபியாவுடன் போட்ட பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் அடிப்படையில் ஈரானை தாக்கட்டுமா?


என்று பாகிஸ்தான் கேட்டுள்ளது. இதை கேட்டு கொந்தளித்த சவுதி அரேபியா, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரின் மூக்கை உடைத்துள்ளது.


ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போரை தொடங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரான் அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. சவுதி அரேபியா உள்பட பல்வேறு அரபு நாடுகள் ஈரான் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது.


இன்று 8 வது நாளாக போர் தொடர்ந்து வருகிறது. இன்றைய தினமும் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை தளத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அந்த ஏவுகணையை சவுதி அரேபியா இடைமறித்து தாக்கி அழித்தது. ஈரானின் தொடர் தாக்குதலால் சவுதி அரேபியா பதற்றத்தில் உள்ளது.


உதவிக்கு போன பாகிஸ்தான்


இதற்கிடையே தான் சவுதி அரேபியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் களமிறங்கி உள்ளார். சவுதி அரேபியாவுக்காக, ஈரானை தாக்க அவர் தயார் என்று சவுதி அரேபியாவிடம் கூறியுள்ளார். மேலும் அவர் சவுதி அரேபியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் காலித் சல்மானை சந்தித்து பேசி உள்ளார். ஆனால் பாகிஸ்தானின் உதவியை சவுதி அரேபியா ஏற்கவில்லை.


உதவியை ஏற்க மறுத்த சவுதி


இந்த சந்திப்புக்கு பிறகு சவுதி அரேபியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் காலித் சல்மான், அசீம் முனீருடன் சந்தித்த போட்டோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ''பாகிஸ்தான் ராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசீம் முனீருடன் சந்திப்பு நடந்தது. எங்களின் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு உட்பட்டு சவுதி அரேபியா மீதான ஈரானின் தாக்குதல்களை தடுக்க தேவையன நடவடிக்கைகள் பற்றி விவாதித்தோம். இந்த சமயத்தில் இதுபோன்ற கூட்டு நடவடிக்கைகள் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை சீர்க்குலைக்கும் என்பதை வலியுறுத்தினோம். அதோடு ஈரான் தனது தவறான கணக்கீட்டை மறந்து அறிவார்ந்து செயல்படும் என்று கூறினோம்'' என்றார்.


மூக்கை உடைத்த சவுதி அரேபியா


இதன்மூலம் உங்களின் உதவி எங்களுக்கு தேவையில்லை. ஈரான் பிரச்சனையை நாங்களே பார்த்து கொள்கிறோம் என்று சவுதி அரேபியா, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரின் மூக்கை உடைத்து அனுப்பி உள்ளது. மேலும் திடீரென்று சவுதி அரேபியாவுக்கு, பாகிஸ்தான் உதவி செய்ய முயன்றதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது.


இருப்பினும் இந்த எக்ஸ் பதிவில் சவுதி பாதுகாப்பு தறை அமைச்சர் ஈரான் தனது தவறான கணக்கீட்டை மறந்து அறிவார்ந்து செயல்பட வேண்டும் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். இது ஈரானுக்கான வார்னிங்காக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் ஈரான் நினைத்து பார்க்க முடியாத செயலை கூட சவுதி அரேபியா செய்யலாம் என்பதை இந்த வார்த்தை மூலமாக ஈரான் கூறியுள்ளதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் சொல்கின்றனர்.


இருநாடுகள் இடையே இருக்கும் ஒப்பந்தம்


அதாவது கடந்த ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சவுதி அரேபியாவுக்கு சென்றார். சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகள் இடையே பரஸ்பர பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தம் கையெழுத்தானது பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் (Strategic Mutual Defence Agreement) என அழைக்கப்படும் டீல் இருநாடுகள் இடையே கையெழுத்தானது.


இந்த ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான் மீதான எந்தவொரு தாக்குதலும் சவுதி அரேபியா தன் மீதான தாக்குதலாக எடுத்து கொள்ளும். அதேபோல் சவுதி அரேபியா மீதான எந்தவொரு தாக்குதலையும், பாகிஸ்தான் தன் மீதான தாக்குதலாக எடுத்து கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


அதுமட்டுமின்றி பாகிஸ்தான் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் சவுதி அரேபியா பதிலடி கொடுக்கும். சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும்.


ஈரானிடம் இறங்கி போகும் சவுதி


இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் சவுதி அரேபியாவிற்கு உதவ பாகிஸ்தான் சென்றது. ஆனால் சவுதி அரேபியா, ஈரானுடன் மோதலை கடைப்பிடிக்க விரும்பவில்லை. எப்படியாவது போர் பதற்றத்தை குறைக்க வேண்டும் என்று விரும்புகிறது. இதுதொடர்பாக சவுதி அரேபியா நேரடியாக, ஈரானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால் பாகிஸ்தானின் உதவியை சவுதி அரேபியா ஏற்க மறுத்து அசீம் முனீரின் மூக்கை உடைத்து அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.