திரையும் உரையும் 2026 - டோட்மூன்ட் யேர்மனி!📸


யேர்மனி, டோட்முண்ட் (Dortmund) தமிழர் அரங்கத்தின் சார்பில், கடந்த 26.04.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று 'திரையும் உரையும் 2026' என்னும் பெயரில் குறும்படத் திரையிடலும், சினிமா குறித்த உரையாடல் நிகழ்வும் நடைபெற்றன.


இந்நிகழ்வில் ஓர் ஆவணப்படமும், ஐந்து குறும்படங்களும் திரையிடப்பட்டன. இதில் இரண்டு குறும்படங்கள் முழுமையாகச் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டிருந்தன. மற்றொரு குறும்படத்தில் நடிகர்களை வைத்துப் படமாக்கியிருந்தாலும், படமாக்க முடியாமல் போன சில காட்சிகளை AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கியிருந்தனர். இவை தவிர, AI மூலம் உருவாக்கப்பட்ட இரண்டு பாடல்களும் திரையிடப்பட்டன.


AI மூலம் உருவாக்கப்பட்ட படங்கள் பார்வையாளர்களுக்குப் பெரும் வியப்பை ஏற்படுத்தின. இருப்பினும், "உண்மையான நடிகர்கள் நடித்து உருவான குறும்படங்களைப் பார்க்கும்போது ஏற்படும் அந்த உணர்வுப்பூர்வமான நெருக்கம், AI படங்களில் முழுமையாக வெளிப்படவில்லை" என்பதே பலருடைய கருத்தாக இருந்தது.


ஜெர்மனியில் சினிமாத்துறை சார்ந்து இயங்குபவர்களின் உரைகளும் நிகழ்வில் இடம்பெற்றன. திரையிடப்பட்ட படங்கள் மற்றும் உரைகள் குறித்துப் பார்வையாளர்கள் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். வெளிப்படையான விமர்சனங்கள், காரசாரமான விவாதங்கள் மற்றும் கிண்டலான கருத்துக்களென நிகழ்வு முழுவதும் கலகலப்பாகவும் ஆரோக்கியமாகவும் அமைந்தது.


ஒட்டுமொத்தமாக, புதிய தொழில்நுட்பங்களையும் படைப்பாற்றலையும் இணைக்கும் ஒரு சிறப்பான நிகழ்வாக 'திரையும் உரையும் 2026' நடைபெற்றது மகிழ்ச்சியை தந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.