லண்டனில் நடந்த சோகம்!!
பிரித்தானியாவின் லண்டனில், இலங்கையைப் பின்னணியாகக் கொண்ட ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்தவர் அனோஜன் ஞானேஸ்வரன் (21). யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியைச் சேர்ந்த இவர், கணக்கியல் மற்றும் நிதித்துறையில் மூன்றாம் ஆண்டு கல்வி பயிலும் திறமையான மாணவராக இருந்தார்.
மேலும், கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றவராகவும், ஐரோப்பிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றவராகவும் குறிப்பிடப்படுகிறார்.
2024 ஜனவரி 8ஆம் திகதி தெற்கு லண்டனில் உள்ள ஸ்ட்ராபெரி ஹில் ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகராறைத் தொடர்ந்து, டினோ டொனால்ட்சன் என்ற நபர் அனோஜனை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்திற்குப் பின்னர் ஒரு மணி நேரத்திற்குள், குற்றவாளி எதுவும் நடக்காதது போல் பேருந்தில் சிரித்தும் பேசிக்கொண்டும் சென்ற காட்சிகள் சிசிடிவி பதிவுகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மேலும், ஒரு வீட்டின் கதவு மணியில் பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவில், “நான் அவனை முதுகில் முழுமையாகக் குத்தினேன்” என அவர் பெருமையாக ஒப்புக்கொண்டதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த ஓல்ட் பெய்லி நீதிமன்றம், டினோ டொனால்ட்சனை குற்றவாளி என அறிவித்துள்ளது.
அவருக்கான தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த அனோஜனின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவர் எங்கள் அன்பிற்குரிய மகன் மற்றும் சகோதரன். எதிர்காலம் குறித்து பல கனவுகள் கொண்டிருந்தார்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் புலம்பெயர் தமிழர் சமூகத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை