இத்தாலியில் இலங்கையர் மரணம்!
இத்தாலியின் மிலன் மாகாணத்தின் கோர்சிகோ பகுதியில் உள்ள Naviglio Grande கால்வாய் நீரில் இருந்து நேற்றைய தினம் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் இலங்கையை சேர்ந்த 38 வயதான ஷான் ஹேமல் கோமிஸ் முஹந்திரம்கே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது மனைவி நேற்று முன்தினம் கணவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்த நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கால்வாய் நீரோட்டத்தில் சடலம் அடித்துச் செல்லப்படுவதை கவனித்த பல பாதசாரிகள் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
உள்ளூர் பொலிஸார் மற்றும் அம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர உதவிப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.
முதற்கட்ட தகவல்களுக்கமைய, குறித்த நபர் பல மணி நேரமாக தண்ணீரில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தற்போது அவரது உடலில் காயஙகள் ஏற்பட்டதற்கான அடையாளங்கள் எதுவும் காணப்படவில்லை.
இது தற்செயலாக நீரில் மூழ்கிய மரணமா, திடீர் உடல்நலக்குறைவா அல்லது ஏதேனும் வன்முறைச் செயலா என்பதைக் கண்டறிய பொலிஸார் முயன்று வருகின்றனர்.
அதற்கமைய, உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நபர் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளவோ அல்லது குளிக்கவோ முயன்று, தண்ணீருக்குள் விழுந்திருக்கலாம் என்பதையும் நிராகரிக்க முடியாதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை