மன்னார் இராணுவ முகாமில் நடந்த துயரம்!!


 மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில், கடமையில் இருந்த இராணுவ வீரர் ஒருவரின் துப்பாக்கி, தவறுதலாக வெடித்ததில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (22) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இராணுவ வீரர் மன்னார் சௌத்பார் இராணுவ முகாமில் கடமையாற்றியவர் (வயது 46) என தெரியவந்துள்ளது.

இந்த இராணுவ வீரர் மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்ததோடு, அங்கு கடமையில் உள்ள இராணுவ வீரர்களுக்கு பொறுப்பாக இருந்து, பணி நிமித்தம் துப்பாக்கிகளை வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இராணுவ வீரர்களுக்கு துப்பாக்கிகளை பரிசோதித்து வழங்க முற்பட்டபோதே துப்பாக்கியொன்று வெடித்திருக்கிறது. இதன் காரணமாக அந்த இராணுவ வீரர் காயமடைந்த நிலையில் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

எனினும் குறித்த இராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த இராணுவ வீரரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.