பெண் வைத்தியர் மர்ம மரணம்!!


 கண்டி - தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றுக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் வைத்தியர் தொடர்பில் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

அம்பாறை வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் பௌதீக சிகிச்சை நிபுணர் (பிசியோதெரபிஸ்ட்) 33 வயதான ஷம்யா தர்ஷனி என்ற பெண் 17 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இவர் கழுத்து இறுகி மரணமடைந்திருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் பெண்ணின் காதலனை தேடுவதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதுடன், இதுவரை சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் தொடர்பான பல தகவல்களை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

ஹோட்டல் அறையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ​​16 ஆம் திகதி இரவு சுமார் 9.50 மணியளவில் அந்த பெண்ணின் காதலன் வருகை தந்து சுமார் 40 நிமிடங்கள் தங்கியிருந்த பின்னர் இரவு சுமார் 10.30 மணியளவில் மயக்க நிலையில் இருந்த அந்த பெண்ணை காரில் ஏற்றி அழைத்துச்சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன்பின்னர் சந்தேகநபரான காதலன் சடலம் தொடர்பில் பொலிஸாருக்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்கியதாக சந்தேகிக்கப்படும் நிலையில், தெல்தெனியா பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்குச்சென்று ஆய்வு செய்தபோது, ​​காரின் முன் இருக்கை மடிக்கப்படாமல், கருப்புத்துணியால் மூடப்பட்ட நிலையில் சடலம் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இருவரும் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு காதலிக்க தொடங்கியதாகவும், இளைஞனுடனான காதல் உறவு குடும்பத்தினருக்கு தெரிந்திருந்த நிலையில், இளைஞன் வெலிகமவில் உள்ள அவளது வீட்டிற்குப் பலமுறை வந்துச்சென்றுள்ளதைாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடா செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டதாக தினேஷ் ஷ்யாமாவிடம் கூறி பெருந்தொகை பணத்தை கடணாக பெற்ற நிலையில், வாக்குறுதியளித்தபடி வட்டியை செலுத்தாததால், கடன் தொல்லையில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

சந்தேகநபர் பெண்ணின் உடலைக்கொண்டு செல்ல பயன்படுத்திய கார், அம்பாறை பகுதியில் வசிக்கும் அவரது மற்றொரு தோழிக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் குறித்த பெண்ணுக்கு 'தினேத் திஸாநாயக்க' என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள நிலையில், அவரது தேசிய அடையாள அட்டையில் உள்ள உண்மையான பெயர் 'ஜயசுந்தர முதியான்சேலாகே சம்பிக ஸ்ரியான் ஜயசுந்தர' என்பதும், அவர் நாரம்மல பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன், சந்தேகநபர் போலி தலைமுடி (Wig) அணிந்து தனது உண்மையான தோற்றத்தை மறைத்து வாழ்ந்து வந்துள்ளதுடன், இவருக்கு பல யுவதிகளுடன் தொடர்புகள் இருந்துள்ளதாகவும், பெண்களை ஏமாற்றி பணம் பறித்த பல சம்பவங்களுடன் இவர் தொடர்புபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகநபருக்கு எதிராக கம்பஹா, புதுக்கடை, திஸ்ஸமஹாராமய உள்ளிட்ட நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், பெண்களை ஏமாற்றி பணம் பறித்தமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கும் இவருக்கு எதிராகப் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான இந்த சந்தேகநபரின் குற்றச் செயல்களுக்கு அவரது மனைவியும் ஆதரவளித்து உதவிகளை வழங்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பில், நுவரெலியா பொலிஸார் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த யுவதியின் காதலன் எனக்கூறப்படும் நபருக்கு எதிராக நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெலிகம பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த யுவதியின் சடலம் மீதான இறுதிச் சடங்குகள் நேற்று இடம்பெற்றன.

சந்தேகநபர் தொடர்பாக தற்போது நுவரெலியா பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமரகோன் பண்டாரவின் நேரடி மேற்பார்வையின் கீழ் மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.    


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.