பெரும் ஆதிக்கம் செலுத்தும் சமூக வலைத்தளம்!!


 பாரம்பரிய ஊடகங்களை விட சமூக வலைதளங்கள் மற்றும் காணொளி தளங்களையே மக்கள் அதிகளவில் நாடுவதாக 'ரொய்ட்டர்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் செய்தி அறிக்கை 2026' தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள 48 நாடுகளில், சுமார் 1,00,000 மக்களிடம் நடத்தப்பட்ட இணையவழி ஆய்வுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 54% பேர் செய்திகள் மற்றும் அன்றாடத் தகவல்களுக்காக சமூக வலைதளங்கள் மற்றும் காணொளி பகிர்வுத் தளங்களையே பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மாற்றம் குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே மிகத் தீவிரமாக உள்ளது. இளைய தலைமுறையினர் பாரம்பரிய செய்தி இணையதளங்கள், தொலைக்காட்சி அல்லது நாளிதழ்களைப் பார்ப்பதைத் தவிர்த்து காணொளிகள், சமூக வலைதள இன்ஃபுளூன்சர்கள் (Influencers) மற்றும் ஒன்லைன் ஆளுமைகள் மூலமாகவே செய்திகளை தேடுகின்றனர்.

நடப்பு நிகழ்வுகள் குறித்து பொதுமக்களின் புரிதலை உருவாக்குவதில், தனிநபர் உள்ளடக்க உருவாக்குநர்கள் (Creators) மற்றும் சுயாதீன பதிப்பகங்களின் (Independent Publishers) பங்கு முன்னெப்போதையும் விட வேகமாக அதிகரித்து வருகிறது. செய்திகள் தேடுவதில் ஏற்பட்டுள்ள இந்த டிஜிட்டல் மாற்றம், ஊடகத்துறையில் சில முக்கிய கவலைகளையும் தோற்றுவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் செய்திகளில் உள்ள உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதில் உள்ள சவால்கள் மற்றும் போலியான செய்திகள் (Misinformation) பரவுவது போன்ற அச்சுறுத்தல்களையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் ஊடக நுகர்வு மற்றும் டிஜிட்டல் இதழியல் போக்குகள் குறித்து உலகளவில் மிக அதிகமாக மேற்கோள் காட்டப்படும் ஆய்வுகளில் ரொய்ட்டர்ஸ் நிறுவனத்தின் அறிக்கை முதன்மையானது.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.