கருப்பட்டி அப்பம்!!

 


இன்று காலையாகாரமாக கருப்பட்டி அப்பம் சுட, வீடே அதன் வாசனையில் சிக்குண்டு போய் விட்டது. கருப்பட்டி அப்பத்தை பாணி அப்பம் என விளிப்போரும் உள்ளனர்.


ஊரில் வழமையாக வீடுகளில் அப்பம் சுடும் போது, வெள்ளப்பம், பாலப்பம், முட்டை அப்பம் என ஒரே மாக்கலவை யைக் கொண்டு அப்பங்களை சுட்டு விட்டு, இறுதியாக மிஞ்சிய கலவையில் மேலதிகமாக ஒரு முட்டையைச் சேர்த்து சீனி / கருப்பட்டி பாகு / பாணியும் சேர்த்து, இந்த இனிப்பான அப்பத்தைச் சுட்டு எடுப்பது வழமை.  அப்பம் சரியான பதத்தில் வெந்ததும் அதை இரண்டாக மடித்து பிறை வடிவிலோ அல்லது மடிக்காமல் அப்ப வடிவிலோ எடுத்துக் கொள்வார்கள்.  


பாடசாலைச் செல்லும் காலங்களில் அதிகமான நாட்கள் ம்மாவின் கைவண்ணங்கள் தான் நமக்கு காலை ஆகாரம். முந்தைய நாளின் வற்றல் கறியோடு ரொட்டி, இடியப்பம், பிடிக்கை கொழுக்கட்டை, பிட்டு, அப்பம் என அதன் சுவையே தனி. சகோதரர்கள் இருவரும் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு தான் பாடசாலை செல்வார்கள். நமக்கு, பாடசாலையில் இடைவேளையின் போது சாப்பிட tiffin boxல் தான் வைத்து தரப்படும். 


அப்பம் சுடப்படும் நாட்களில், பசியென box ஐ திறந்து, அந்த இனிப்பான அப்பங்களைக் கண்டு முகம் தொங்கிப் போவதுதான் அநேகமாக நடக்கும். இருந்தாலும், சுருண்டு, காய்ந்து, டப்பாவோடு டப்பாவாக ஒட்டி இருக்கும் தம்மாந்துண்டு பணிசை விட அது எவ்வளவோ மேல் என நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்வதுமுண்டு. 


பாடசாலை வாழ்க்கைக்கு பின்னரான காலங்களில் ம்மாவிடம் கருப்பட்டி அப்பம் சுட்டுத்தர கேட்ட நாட்களும் உண்டு.


இந்த கருப்பட்டி அப்பம் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கூட மக்களால் விரும்பப்பட்ட ஓர் உணவு என்கிறார்கள். மதுரைக் காஞ்சியின் அங்காடித் தெருவில் இவை விற்கப்பட்டதாக மாங்குடி மருதனார் "நல்வரி இறாஅல் புரையும் மெல்லடை... தீஞ்சேற்றுக் கூவியர் என குறிப்பிட்டுள்ளாராம். இங்கு பனை வெல்லத்தை பாகாக்கிப் பண்டங்கள் செய்ததால் தீஞ்சேற்றுக் கூவியர் என்றும் அவர்கள் சுட்டது மிகமிக மென்மையான அடை என்பதால் மெல்லடை என்றும் பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் தேன் இறால் போன்ற வரிகளை உடையது என்றும் சுட்டப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  அப்பம் சுடும் சட்டி குவிந்து, குழிந்து காணப்பட்டதால் தான் அப்பம் சுடுவோருக்கு மதுரைக் காஞ்சியில் கூவியர் என பெயர் அமைந்ததாக இணையத்தில் வாசித்த நினைவு.


ஆக, நாம் ஊரை விட்டு எவ்வளவு தூரம் சென்றாலும், நம் பாரம்பரிய உணவுகளை சமைக்கும் போது, நம் தாய் மண்ணின் வாசம் நம்மை சூழ்ந்து கொள்வது இயற்கை

நஸ்ரியா


நன்றி - முகநூல்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.