அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!


யுத்தக் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட விமான நிலையங்களினூடாக வெளிநாடு செல்லாதவர்கள், நாட்டுக்கு மீண்டும் வரும்போது அவர்கள் எதிர்கொள்ளும் தடைகளை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

அந்தத் தீர்மானத்துக்கமைய செயற்படுமாறு குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் இலங்கைக்கு மீண்டும் திரும்புவதற்கு விரும்புவார்களாயின் அவர்கள் இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்தினூடாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்” என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நேற்றைய பாராளுமன்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

யுத்தக் காலத்தின்போது இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக சென்றவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பும்போது அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

அனுமதிக்கப்பட்ட விமான நிலையங்களினூடாக நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடுகளுக்கு செல்லாதவர்கள், மீண்டும் நாட்டுக்கு வரும்போது எதிர்கொள்ளும் தடைகளை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

அதற்கமைய செயற்படுமாறு குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட வகையில் நாட்டை விட்டு வெளியேறாதவர்கள் மீண்டும் நாட்டுக்கு வரும்போது அவர்கள் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டார்கள்.

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் சட்டத்துக்கு அமைவாகவே அவ்வாறு செயற்பட்டது. தற்போதைய தீர்மானத்துக்கமைய புதிய திருத்தங்களை முன்னெடுக்க உரிய வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் இலங்கைக்கு மீண்டும் திரும்புவதற்கு விரும்புவார்களாயின், அவர்கள் இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு அறிவித்து தாம் இலங்கைப் பிரஜை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அதனைத்தொடர்ந்து அரசப்புலனாய்வு சேவை பிரிவினூடாக அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதனைத் தொடர்ந்து அவர்களால் இலங்கைக்கு வருகை தர முடியும். பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்வைத்த பல கேள்விகளுக்கு நீதியமைச்சுடன் கலந்துரையாட வேண்டியுள்ளது.

ஆகவே இதற்கு பதிலளிக்க இரண்டு வாரகால அவகாசம் வேண்டும். அதனைத் தொடர்ந்து முழுமையான பதிலை பெற்றுக்கொடுக்க முடியும் என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.