டிரம்ப்க்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!!


அமெரிக்காவில் குடியேற விரும்பும் 75 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு குடியேற்ற விசா வழங்குவதை நிறுத்தி வைத்திருந்த டிரம்ப் அரசின் உத்தரவுக்கு எதிராக அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த உத்தரவு சட்டத்திற்கு புறம்பானது என கூறி, விசா தடையை ரத்து செய்ய நீதிபதி ஜீனெட் வர்காஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பு அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான குடியேற்ற கொள்கைக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

2026 ஜனவரி முதல் அமல்படுத்தப்பட்ட இந்தக் கொள்கையின் கீழ் ஆப்கானிஸ்தான், பிரேசில், எகிப்து, ஈராக், நைஜீரியா, சோமாலியா, தாய்லாந்து, ஏமன் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குடியேற்ற விசா வழங்குவது நிறுத்தப்பட்டது.

அதிக ஆபத்து கொண்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் அமெரிக்காவுக்கு பொருளாதார சுமையாக மாறுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை விளக்கம் அளித்திருந்தது.

ஆனால், விசா விண்ணப்பதாரரின் தனிப்பட்ட சூழ்நிலையைப் பரிசீலிக்காமல், அவர்களின் பூர்வீக நாட்டை மட்டும் அடிப்படையாக வைத்து விசா மறுக்குமாறு உத்தரவிடப்பட்டதாக நீதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இந்த உத்தரவை பிறப்பித்த வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தனது சட்டப்பூர்வ அதிகார வரம்பை மீறியுள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தீர்ப்பின் மூலம், குறிப்பிட்ட கொள்கையை மட்டும் காரணமாகக் கொண்டு செய்யப்பட்ட விசா மறுப்புகள் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், டிரம்ப் அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.  



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.