மானத் தமிழினம் மலரட்டும்.!
நதிகள் மலையில் பிறந்து
கடலை அடைவதே நியதி.
நதி மலையேறுவதில்லை.
ஆவியாகி மழையாகி
மறு பிறவி எடுத்தாலே மீண்டும்
மலை ஏறலாம்.
மனித வாழ்வும் நீரோட்டமே.
போனது போனது தான்.
கடந்தது கடந்தது தான்.
முள்ளிவாய்க்காலில் முதுகு குறுகி
வீரங்களைத் தொலைத்து
முள்ளுக்கம்பி வேலியால் எறிந்த உணவை
தமிழனாய்ப் பிறந்ததால் தரங்கெட்டு
கையேந்தி உண்டதை விட ஒரு கேவலம்
இனி வரப் போவதில்லை.
தரம் என்பது கூட்டத்தின் மானமே.
தரங்கெட்ட கூட்டமாய்
தலைகுனிந்த கூட்டம்.
கூட்டமாய் மானமிழந்த கூட்டம்.
தாயின் அந்தரங்கத்தை தடவவிட்டு
உயிர் தரித்த கூட்டம்.
எல்லாவற்றையும் உரிந்து காட்டி
உயிர் தரித்த கூட்டம் .
உயிரைக் கையிலேந்தி
ஊர் விட்டோடிய கூட்டம்.
காசுக்கு ஆசைப்பட்டு
காட்டிக் கொடுத்த கூட்டம்.
அந்நிய தேசங்களில்
அடைக்கலமான கூட்டம்.
போகும் இடமெங்கும் நாணலான கூட்டம்.
வளைந்து கொடுத்து வளைந்து கொடுத்து
கூனலான கூட்டம்.
வாயில் மட்டும் வடைசுடும் கூட்டம்.
மானம் பற்றி கதைக்குதாம்.
மானங் கெட்ட மனிதராகி
வருடமோடிக் கடந்தேகுது.
மானமே இழந்து இனத்துக்குள்
ஒரு தனிநபரின் அந்தரங்கத்தை
துகிலுரியத் துணியும்
துச்சாதனனின் வாரிசுகளே!
இழந்துபோன உங்கள் தாயின்
மானம் மறைத்த அந்தரங்கத்தின்
உள்ளாடைகளால் கொடியேற்றி ஒரு
மானப்புரட்சியை மலர்த்திட முடியுமோ?
ஈனப் பிறவிகளே!
மானத்தை எப்பவோ இழந்த பிறவிகளே!
இனிவரும் சின்னஞ்சிறுகளின்
மானத்தை காக்க
வழி செய்யுங்கள்...
அவர்களின் உள்ளாடைக்குள்
ஒழிந்திருக்கும் மானத்தையாவது
அந்நியர் தடவாதிருக்கட்டும்.
அதன் மூலமாவது ஒரு
மானத் தமிழினம் மலரட்டும்.
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
கருத்துகள் இல்லை