நான்காவது முறையாக பொறுப்பேற்றுள்ள ஏஞ்சலா மெர்கலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஜெர்மனியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் சார்ந்த கிறிஸ்துவ சோஷலிச யூனியன் கட்சி 33 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. எனினும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் கிடைக்காததால் சோஷியல் குடியரசு கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இதில் பல்வேறு முட்டுகட்டைகள் நிலவிவந்த நிலையில் ஜெர்மனியில் நிலையான நிரந்தர அரசு அமையாமல் காபந்து அரசு எனப்படும் இடைக்கால அரசு நடைபெற்று வந்தது. இந்த அரசின் காப்பாளராக ஏஞ்சலா மெர்கல் பொறுப்பு வகித்து வந்தார்.
இதற்கிடையே, ஏஞ்சலா மெர்கல் தலைமையிலான நிரந்தர அரசு அமைய சோஷியல் குடியரசு கட்சி உறுப்பினர்கள் இன்று வாக்களித்துள்ளனர். கட்சி உறுப்பினர்களில் 66.02 சதவீதம் பேர் ஏஞ்சலா மெர்கல் தலைமையிலான கூட்டணி அரசு தொடருவதற்கு அனுமதி அளித்து வாக்களித்தனர். இதையடுத்து, நான்காவது முறையாக பிரதமர் பொறுப்பேற்ற ஏஞ்சலா மெர்கலுக்கு தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜெர்மன் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ஏஞ்சலா மெர்கலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள். இருதரப்பு உறவுகள் மேம்படும் விதத்தில் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கும். மேலும், மார்ச் 22 முதல் 26-ம் தேதி வரை ஜெர்மன் அதிபராக பொறுப்பேற்றுள்ள பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியரின் இந்திய பயணத்தை எதிர்நோக்கி உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.