மஸ்கெலியா பிரதேசசபை இ.தொ.கா வசம்!

மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவியாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண் வேட்பாளரான செம்பகவள்ளி தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு உதவி தலைவராக பெரியசாமி பிரதீபன் நியமிக்கப்பட்டுள்ளார் . 

மஸ்கெலிய பிரதேச சபைக்கான தலைவர் தெரிவு நடவடிக்கையின் போது அங்கு பதற்றமான நிலை தோன்றியிருந்தது. 

அந்த சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவர் சபைக்கு வருகை தரவில்லை என்பதுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் அவரை மறைத்து வைத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியதை தொடர்ந்து அங்கு குழப்பநிலை ஏற்பட்டது. 

எவ்வாறாயினும் மத்திய மாகாண நிர்வாக ஆணையாளர் மேனக ஹேரத் முன்னிலையில் இன்று காலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தலைவர் மற்றும் உபதலைவர் தெரிவு இடம்பெற்றுள்ளது. 

இதனை தொடர்ந்து இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உறுப்பினர்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் பதற்றநிலை ஏற்பட்டது. 

இன்று இடம்பெற்ற வாக்களிப்பில் இ.தொ.கா. சார்பாக எட்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டதோடு ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினர் கலந்து கொள்ளவில்லை. 

இதேவேளை மஸ்கெலியா நகரபகுதியில் இ.தொ.கா. ஆதரவாளர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களும் பேரணியில் ஈடுபட ஆயத்தமானபோது, பொலிஸார் பேரணிக்கான அனுமதியை வழங்க மறுத்து தடுத்தமையினால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு அருகிலும் பதற்ற நிலை தோன்றியிருந்தது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.