தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரங்கள் இருந்தால் கறுப்பு ஜூலையை மீண்டும் தடுக்கலாம்!

இராணுவத்தை வைத்துக்கொண்டு அதிகாரங்களைத் தம்வசம் வைத்துக்கொண்டு பொருளாதார விருத்தி பற்றியும் நல்லிணக்கம் பற்றியும் அரசாங்கம் கருத்து தெரிவிப்பதை முன்னறிவு உள்ள தமிழர்கள் யாவரும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என,வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வாராந்த கேள்வி பதில் அறிக்கை வெளியிட்டு வருகின்றார். அதில், சிலர் வடமாகாணத்தில் பொருளாதார விருத்தி முதலிடம் பெற வேண்டும் அது நல்லிணக்கத்திற்கு வித்திடும் என தெரிவிப்பது குறித்தும் வேறு சிலர் அரசியல் தீர்வுக்குப் பின்னரே பொருளாதார விருத்தி ஏற்பட வேண்டும் என கூறுவது தொடர்பிலும் பதிலளித்த போதே முதலமைச்சர் இதனை கூறியுள்ளார்.

பொருளாதார விருத்தியைத் தந்து எமது உரிமைகளை, உரித்துக்களைத் தராது விடுவது எம்மைப் பணத்திற்கு வாங்குவது போலாகும். வாங்கிய பின் எம்மால் வாய் திறக்க முடியாது நாம் விலைக்கு வாங்கப்பட்டவர்கள் ஆகிவிடுவோம். பொருளாதார விருத்தியால் தற்போதைய காலகட்டத்தில் நல்லிணக்கம் ஏற்படுவது கிணற்றுக்குள் விழுந்திருக்கும் ஒருவனுக்கு வெளியில் இருப்பவன் சம உரிமை பற்றிப் பேசுவது போலாகும்.

ஒரு லட்சத்து 50 ஆயிரம் இராணுவத்தினரை வடமாகாணத்தில் நிறுத்தி வைத்துக்கொண்டு, சகல நிர்வாக, பொருளாதார, அரசியல் உரித்துக்களைத் தாமே தம் கையில் வைத்துக் கொண்டு, பொருளாதார விருத்தியும் நல்லிணக்கமும் குறித்து பேசுவது தமிழ் மக்களை தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க எடுக்கும் நடவடிக்கை. அந்தப் பொறியினுள் தமிழ் மக்கள் சிக்கிக் கொண்டால் எதிர்வரும் பத்து வருடங்களில் வடகிழக்கு மாகாணங்களில் சிங்கள ஆதிக்கம் மேலோங்கிவிடும். இதனால் தான் அரசியல் தீர்வுக்கு நாங்கள் முதலிடம் கொடுத்துள்ளோம்.

அத்துடன் வடக்கிலிருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்வதன் ஊடாக மத்திய அரசாங்கத்திற்கு அன்னிய செலாவணி கிடைக்கப்பெறும். இதன் மூலம் வடபகுதி தமிழ் மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைவார்கள். ஆனால் உரிமைகள் அற்ற நாம் வடமாகாணத்தில் 1983 ஜூலை மாதத்தை மீண்டும் ஒரு முறை அனுபவிக்க மாட்டோம் என்பதில் என்ன நிச்சயம்?

தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரங்கள் இருந்தால் கறுப்பு ஜூலை மீண்டும் கட்டவிழ்க்கப்படுவதைத் தடுக்கலாம். ஆகவே இராணுவத்தை வைத்துக்கொண்டு அதிகாரங்களைத் தம்வசம் வைத்துக்கொண்டு பொருளாதார விருத்தி பற்றியும் நல்லிணக்கம் பற்றியும் அரசாங்கம் கருத்து தெரிவிப்பதை முன்னறிவு உள்ள தமிழர்கள் யாவரும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவேதான் அரசியல் தீர்வு முதலில் வரவேண்டும். எனினும் மத்திய அரசாங்கத்தை புறக்கணிக்கவில்லை. மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்க எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் கண்ணை மூடிக் காட்டுக்குள் மத்திய அரசாங்கம் கொண்டு போக நாம் இடம் கொடுக்க மாட்டோம்' எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.