மட்டக்களப்பில் பாரிய விபத்து: இளைஞர் பலி - 05 பேர் படுகாயம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காட்டில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். 

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கோழி ஏற்றிவந்த டிப்பர் வாகனமும் வேனும் விபத்துக்குள்ளானதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்போது வேன் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் டிப்பரில் பயணம் செய்த மூவரும் வேனில் பயணம் செய்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதில் டிப்பரின் சாரதி உட்பட இருவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், மூவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

பொலன்னறுவையில் இருந்து கோழி ஏற்றிக்கொண்டு கல்முனை நோக்கி வந்த டிப்பர் வாகனம் ஓந்தாச்சிமடத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் மீது மோதியுள்ளது. 

இதன்போது டிப்பரில் மோதுண்ட வேன் மின்கம்பதிலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த விபத்தில் ஓந்தாச்சிமடம் 36வீட்டுத்திட்டத்தை சேர்ந்த இராஜரெட்னம் தினேஸ்காந்த் என்ற 27வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.