உளவளத்துணை டிப்ளோமா பட்டதாரிகளும் உள்வாங்கப்பட வேண்டும்!
உளவள ஆசிரியர்களுக்கான ஆட்சோ்ப்பில் பட்டதாரிகள் மாத்திரமன்றி உளவளத்துணை டிப்ளோமா பட்டதாரிகளும் உள்வாங்கப்பட வேண்டுமென இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ஏ.பி கமர்டீன் தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடாபில் சங்கத் தலைவர் தெரிவித்ததாவது,
உளவள ஆலோசனையாளர், உளவள ஆலோசனை உதவியாளர் என்ற உளவளத்துறை சார்ந்த பதவி நியமனங்களுக்காக ஆடசேர்ப்பு செய்யப்படும்போது உளவளத்துணையில் டிப்ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்துள்ள உளவளத்துணை டிப்ளோமாதாரிகளையும் உள்வாங்குவதற்கான நியாயங்களை முன்வைத்து பல முறை எமது சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், இக்கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
இலங்கையின் சனத்தொகையில் 2.3 வீதமானோர் உளப் பிரச்சினையுடன் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாட்டில் நிகழுகின்ற வன்செயல்கள் துஷ்பிரயோக நடவடிக்கைகள் மற்றும் தற்கொலைகள் போன்ற சமூக பிரச்சினைகளில் உளப் பாதிப்புக்களும் குறித்த வகிபங்கினை வகிக்கிறது.
மாணவர்களின் ஒழுக்கமற்ற நடத்தைகளிலும் உளப் பிரச்சினைகள் கணிசமான பங்கினை செலுத்துகின்றன. இவ்வாறான நிலையில் குறித்த நபர்களுக்கு தொழில்வாண்மை உளவளத்துணையாளர்களின் உதவி இன்றியமையாததாகவுள்ளது. இவ்வாறு பல்வேறு மட்டங்களில் பல்வேறு தரப்பினருக்கு உளவள ஆலோசனை வழங்க வேண்டிய தேவை தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இவற்றைக் கருத்திற்கொண்டு சமூக சேவைகள் அமைச்சு. சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சு, சுகாதார அமைச்சு என்பவற்றினால் பல்வேறு அரச நிறுவனங்களில் உளவள ஆலோசகர்களும் உளவள உதவியாளர்களும் என பல்வேறு நியமனங்கள் உளவளத்துறையில் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நியமனங்களின்போது பட்டதாரிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், 18 மாதங்கள் வரையான கால எல்லையைக் கொண்ட முழுக்க முழுக்க உளவியலுடன் தொடர்புபட்ட கற்கை நெறியை கால நேரங்கள் மற்றும் பணச் செலவு செய்து சமூக சேவைகள் அமைச்சின் கீழ் உள்ள தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகம் போன்ற உளவளத்துணை கற்கை நெறிக்காக அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களில் கல்வி கற்று உளவியல் உளவளத்துணையில் டிப்ளோமாப் பட்டங்களை பலர் பூர்த்தி செய்துள்ளர்கள்.
இக்கற்கை நெறியை பூர்த்தி செய்வதற்காக ஒரு இலட்சத்துக்கும் மேலான பணம் இவர்களால் செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செலவு செய்து இக்கற்கை நெறியை பூர்த்தி செய்துள்ளவர்கள் நூற்றுக்கணக்கில் இருந்தும், இவர்கள் குறித்த நியமனங்களின்போது உள்வாங்கப்படாது புறக்கணிக்கப்படுகின்றனர்.
குறைந்த பட்சம் இத்துறையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களில் கூட டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களும் விண்ணப்பிக்க முடியும் என்ற வாசகம் கூட இடம்பெறுவதில்லை.
இதனால் இக்கற்கை நெறியைப் பூர்த்தி செய்பவர்கள் அவர்களது துறையில், தொழில்வாய்ப்பொன்றை பெற்றுக்கொள்வதில் எதிர்காலமின்றி உள்ளனர் என்று தெரிவித்தார். .
இந்நிலையில், பாடசாலைகளில் உளவள ஆசிரியர்களை நியமிப்பதற்கான ஆட்சோ்ப்பு நடவடிக்கைகளை கல்வி அமைச்சு முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது. அதனால், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் உளவளத்துணையில் டிப்ளோமா கற்கை நெறியை ப் புர்த்தி செய்து தொழில்வாய்ப்பின்றியுள்ள டிப்ளோமாதாரிகளின் நிலமைகளைக் கருத்திற்கொண்டு, உளவள ஆலோசகர் மற்றும் உளவள உதவியாளர் நியமனங்களுக்காக பட்டதாரிகளை மாத்திரமின்றி டிப்ளோமாதாரிகளையும் இணைத்துக்கொள்ளுமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை