வவுனியா மாவட்டத்தின் பல வீதிகள் முழுமையாகச் சேதமடைந்த நிலை!
அண்மைக் காலமாக வவுனியா மாவட்டத்தின் பல வீதிகள் முழுமையாகச் சேதமடைந்த நிலையில் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்து செய்கின்ற வவுனியாவின் பல முக்கியமான வீதிகள் இனங்காட்டப்பட்டும், உரியவர்களுக்கு முறையிட்டும், போராட்டங்களை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இன்றி காணப்படுகின்றன என்று பலராலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன. இது தொடர்பிவ் மேலும் தெரியவருவதாவது:
ஒரு பிரதேசத்தின் அத்தியாவசிய உட்கட்டுமானங்களில் மிக முக்கியமானது வீதியே ஆகும். கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தமது அன்றாட மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொள்வதில் தரமான வீதிகள் பெரும் பங்கு வகிக்கின்றன.
வவுனியா –மன்னார் முதன்மை வீதி, நெளுக்குளம் ஊடாக வீரபுரம் செல்லும் வீதி, பூவரசங்குளம் ஊடாக செட்டிகுளம் செல்லும் வீதி, குழுமாட்டுச் சந்தியூடாகச் சுந்தர புரம் செல்லும் வீதி, பிரமனாலங் குளம் பெரிய தம்பனை வீதி, கோவில்குள மூடாக சிதம்பரபுரம் செல்லும் வீதி, ஓமந்தை சேமமடு வீதி, சாந்தசோலை – பூந்தோட்டம் பிரதான வீதி,உள்ளிட்ட மக்கள் பாவனை அதிகமுள்ள வீதிகள் அடங்கலாக வவுனியா மாவட்டத்தின் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் பயன்படுத்துகின்ற வீதிகள் அனைத்தும் போக்குவரத்துக்கு ஒவ்வாத வீதிகளாகவே காணப் படுகின்றன.
போர்க் காலங்களை விடத் தற்போது தான் வீதிகளின் நிலை கேவலமாக உள்ளன என்று மக்கள் விசனமடைந்துள்ளனர். இந்த வீதிகளில் ஒரு சில வீதிகளைத் தவிர ஏனைய பெரும்பாலானவை மாகாண அமைச்சுக்குள் வருவதனால் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சும் மத்திய அரசும் வவுனியா மாவட்டத்தைப் புறக்கணிக்கின்றனவா? துறைசார் அமைச்சர்கள், வர இருக்கின்ற தேர்தல்களை கணக்கில் கொண்டு தமக்கு வாக்களிக்க கூடிய மக்கள் இருக்கின்ற தொகுதியின் அபிவிருத்தியில் மட்டும் கவனம் செலுத்துகின்றனரா? என்ற ஐயப்பாடுகள் வவுனியா மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
வடக்கின் மிக முக்கிய போக்குவரத்து மையமான வவுனியாவின் வீதிகள் சீரழிந்து உள்ளமை வவுனியா மக்களுக்கு மட்டுமன்றி வேறு மாவட்டங்களில் இருந்து வரும் மக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகின்றது.
குறிப்பாகத் தினமும் மன்னார் நகரத்தில் இருந்தும் மன்னார் மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமங்களில் இருந்தும் வவுனியாவுக்குப் பயணம் செய்யும் ஆயிரக் கணக்கானவர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு இந்த வீதிகளைத் துரித கதியில் சீரமைக்க அனைத்து தரப்பினரும் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த உதவ வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வவுனியா நெளுக்குளம் நேரியகுளம் வீதி மற்றும் வவுனியா பிரமனாலங்குளம் வீதி தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்று பொறியியலாளர் கெங்காதரனிடம் கேட்டபோது, ‘‘நெளுக்குளம் தொடக்கம் நேரியகுளம் வரையான 23 கிலோ மீற்றர் தூரமான பாதையில் 6கிலோமீற்றர் பாதை சீராகக் காப்பட் இடப்பட்டுள்ளது. மீதி 13கிலோமீற்றர் வீதி தற்காலிமாக போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் திருத்தியமைக்க பட்டுள்ளது. மிகுதி வீதி திருத்தும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது போலவே வவுனியாவில் இருந்து பிரமனாலங்குளம் வரையான 30 கிலோமீற்றர் பாதையும் தற்காலிகமாக திருத்தியமைக்கபட்டு வருவதுடன் இந்த வீதியும் அத்தோடு பூவரசங்குளம் ஊடான செட்டிகுளம் வீதியும் செயற்படுத்தப்பட இருக்கின்ற ஐறோட் செயற்திட்டத்தில் முழுமையாக காப்பட் இட்டு சீரமைக்கபட உள்ளதனால் அது வரைக்கும் தற்காலிகமாக போக்குவரத்துக்கு ஏற்ற விதத்தில் திருத்தியமைக்கபட்டு வருகின்றன.
நொச்சிமோட்டை பாலம் அடிக்கடி பழுதடைந்து வருகின்றது. அதனை நிரந்தரமான சிமேந்திலான பாலமாக அமைத்து தரும்படி பலதடவைகள் மாகாணத் திணைக்களத்துக்கு கோரிக்கை வைத்து வருகின்றேன். அவர்கள் அதற்குரிய நிதி திட்டங்களை எமக்கு வழங்கினால் நிச்சயமாக எம்மால் செயற்படுத்தப்படும்.
நிதியே இங்கு முக்கியமான பிரச்சினையாகக் காணப்படுகின்றது. இருந்தாலும் எம்மால் இயலுமான வரையில் நாம் சேவை செய்து வருகின்றோம்” என்று தெரிவித்தார்.ஏனைய வீதி தொடர்பாக வீதி அபிவிருத்தி திணைக்கள முதன்மைப் பொறியியலாளரிடம் கேட்டபோது,‘‘சாந்த சோலை வீதி, மற்றும் தம்பனை வீதி, சுந்தரபுரம் வீதிகளையும் இன்னும் ஓரிரு கிழமைகளில் திருத்தியமைப்பதற்குரிய ஏற்பாடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐநாட் திட்டத்தில் இந்த வீதிகளும் 2019ஆம் ஆண்டளவில் நிரந்தரமாக சீரமைக்கபட உள்ளதால் தற்பொழுது போக்குவரத்துக்கு ஏற்ற விதத்தில் திருத்தி யமைக்கப்பட்டு வருகின்றன’’ என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை