தமிழ் நாட்டு சட்ட சபையில் ஈழத்தமிழர்களுக்கான குரல் ஒலிக்கும்!

ஈழத்தமிழர்களின் இன்னல்கள் குறித்தும் தற்போதைய நிலை குறித்தும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசுவதாக அ.தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினரும் நகைச்சுவை நடிகருமான கருணாஸ் அவர்கள் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஏதிலிகளாக வாழ்ந்து வரும் உயர்கல்வி வாய்ப்பு கிடைக்காத, மறுக்கப்படும் ஈழத்தமிழ் மாணவர்களின் கல்வித் தேவையினை நிறைவு செய்யும் வகையில் கல்லூரி ஒன்றை அமைப்பதற்கு தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினர் கருணாஸ் அவர்கள் முயற்சித்து வருகின்றார். அக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கௌரவ வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை கலந்து கொள்ளுமாறு அவரிடம் நேரில் அழைப்பு விடுத்திருந்த கருணாஸ் அவர்கள் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களையும் சந்தித்துள்ளார். வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.


இச்சந்திப்பின் போது அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களிடம் ஈழத்தமிழர்களின் இன்றை நிலை குறித்து கேட்டுத் தெரிந்து கொண்ட கருணாஸ் அவர்கள் அவை குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசுவதாக தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.