இரணைமடுக் குளத்து நீரை விவசாயிகள் கவனமாகப் பயன்படுத்தவும்!
கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் இருந்த நீரில் மூன்றில் ஒரு பங்கு நீர் விதைப்பின்போதே பயன்படுத்தப்பட்டு விட்ட நிலையில் விவசாயிகள் நீரைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என இரணைமடு விவசாயிகள் சம்மேளனச் செயலாளர் மு.சிவமோகன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;
2018ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் இரணைமடுக் குளத்தின் கீழ் ஆயிரத்து 812 ஏக்கர் செய்கை மேற்கொள்ளத் தீர்மானித்து அதற்கான விதைப்புக ளும் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் குறித்த விதைப்பு ஆரம்பிப்பதற்பு முன்பு குளத்தில் 16.2 அடி நீர் காணப்பட்டது.
இருப்பினும் விதைப்பு மட்டுமே முடிவடைந்த நிலை யில் தற்போது 14.2 அடி நீரே குளத்தில் உள்ளது. அதாவது தற்போது உள்ள நீரானது ஆரம்பத்தில் காணப்பட்ட நீரின் 2/3 பங்கு மட்டுமே கையிருப்பில் உள்ளது.
நெல் அறுவடையை நெருங்க சுமார் 3 மாதகாலம் எட்டவேண்டிய தேவையுள்ளது. இதனால் அனைத்து விவசாயிகளும் தமது நீர்ப்பாச்சலின் போது வீண் விரயத்தைத் தடுப்பது மிக அவசியம்.
யாராவது ஓரு சில விவசாயிகள் மத்தியில் கவனக் குறைவு ஏற்பட்டாலும் ஒட்டு மொத்த விவசாயத்தின் இறுதிப் பாச்சலுக்கும் நீர் இன்மை ஏற்படும். அதன் பின்பு நாம் அதிகாரிகளை மட்டும் குறை கூறாது எமது பொறுப்பை உணர்ந்து செயல்படுவதன் மூலமே அதிகாரிகளையும் கேள்வி கேட்க முடியும். இதை எண்ணி மிகவும் சிக்கனத்தையும் கவனத்தையும் பேண வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை