போலி ஆவணம் தாக்கல் செய்ததாக குற்றச்சாட்டு தனுஷ் !

போலி ஆவணங்களை தாக்கல் செய்ததால் நடிகர் தனுஷ் மீது நடவடிக்கை கோரி மேலூரை சேர்ந்த கதிரேசன், ஐகோர்ட் கிளையில் மீண்டும்  மனு செய்துள்ளார்.மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்தவர் கதிரேசன். இவர், நடிகர் தனுஷை தனது மகன் என்றும், தனக்கு மாதந்தோறும் அவர் ஜீவனாம்சம் வழங்க  வேண்டும் என்று கோரியும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த மேலூர் நீதிமன்றம், தனுஷ் நேரில்  ஆஜராக உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு தடை விதிக்கவும், மேலூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்யவும் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்தாண்டு நடிகர்  தனுஷ் மனு செய்தார். விசாரணையின் போது தனுஷை ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அவர் ஆஜரானபோது மருத்துவக்குழுவினர், அவரின் அங்க  அடையாளங்களை பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன் தொடர்ந்த வழக்ைக ரத்து செய்து  ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
 இந்த வழக்கில், நடிகர் தனுஷ் தனது பிறப்பு மற்றும் கல்விச்சான்றிதழ்களை போலியாக தயாரித்து தாக்கல் செய்துள்ளதால், அவர் மீது நடவடிக்கை  எடுக்கக் கோரி கதிரேசன் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல எனக்கூறி கடந்த மார்ச் 23ல் கோர்ட்  தள்ளுபடி செய்தது. இந்நிலையில், கதிரேசன் ஐகோர்ட் கிளையில் மீண்டும் மனு செய்துள்ளார். அதில், மதுரை கோ.புதூர் மற்றும் மதுரை போலீஸ்  கமிஷனரிடம் அளித்த புகாரின் மீது குற்றவியல் சட்டப்படி போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.  இந்த மனு  விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.