மைத்திரி - ரணில் செவ்வாயன்று சந்திப்பு!

புதிய அமைச்சரவையை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான முக்கிய சந்திப்பு எதிர்வரும் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு இலண்டன் சென்றிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திங்கட்கிழமை நாடு திரும்பவிருக்கின்றார். அவர் நாடு திரும்பியதும் உருவாகியுள்ள அரசயில் நெருக்கடிகளை நிவர்த்திப்பதற்கு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்டமாக நல்லாட்சி அரசிலிருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதிலாக ஆளும் தரப்புடன் கட்சியின் வேறு பாராளுமன்ற உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ளவுள்ள நிலையில் அது தொடர்பில் சுதந்திரக் கட்சித் தரப்பினருடன் ஜனாதிபதி உடனடிப் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார்.
அதனையடுத்து செவ்வாய்க்கிழமையன்று ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதன்போதே புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் இரு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடவுள்ளனர்.
ஜனாதிபதி இலண்டன் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர் அமைச்சரவைக்கு தற்காலிகமாக நான்கு பதிலமைச்சர்களை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய அமைச்சரவை அமைக்கப்படும் போது சமுர்த்தி விவகாரம், தொழில் அமைச்சு இரண்டையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கோரவிருப்பதாகவும், புதிதாக இணையும் சுதந்திரக் கட்சி எம்.பிக்களில் சிலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டதன் பின்னர் மீதமாகும் பட்சத்தில் அவற்றை ஐக்கிய தேசிய முன்னணி தரப்புக்கு வழங்கவும் மற்றும் பிரதியமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்களையும் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.
அதே சமயம் நல்லாட்சி அரசாங்கத்தை தடையின்றி முன்னெடுத்துச் செல்வது குறித்தும், அரசின் புதிய வேலைத்திட்டம் குறித்தும் ஜனாதிபதியும் பிரதமரும் விரிவாக ஆராயவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது இவ்விதமிருக்க ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்புக் குழுவும் அடுத்த சில தினங்களுக்கிடையில் கூடி மாமற்றங்கள் தொடர்பில் இறுதிக்கட்ட இணக்கப்பாடுகளை எட்டவிருபப்தாக பாராளுமன்ற உறுப்பினர் ஜே. சி. அலவத்துவல தினகரனுக்குத் தெரிவித்தார்.
கட்சியின் செயற்குழு 26 ஆம் திகதி கூடவுள்ள நிலையில் மறுசீரமைப்பு குழுவின் இறுதி முடிவுகளை செயற்குழுவுக்கு சமர்ப்பிக்கும் பொருட்டு அதுகுறித்து இறுதி முடிவெடுக்கும் கூட்டம் இரண்டொரு தினங்களுக்கிடையில் கூடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
செயற்குழுவில் எட்டப்படும் தீர்மானத்துக்கமைய கட்சியின் மத்தியகுழு கூடி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளுமெனவும் அவர் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.