பிரேரணை குறித்து கூட்டமைப்பின் இறுதி தீர்மானம் இன்று!

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இறுதித் தீர்மானம் இன்று எடுக்கப்படவுள்ளது.  நல்லாட்சி பயணங்களையும் சூழ்நிலைகளையும்  கருத்தில் கொண்டும் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளதாக கூட்டமைப்பு  தெரிவித்துள்ளது. 


பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை  நாளைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் நாளை இரவு 9 மணிக்கு வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டினை உறுதிப்படுத்த நேற்றைய தினமும் இன்றும் தமது பாராளுமன்ற  உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவித்திருந்த போதிலும் நேற்று நடைபெறவிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டம் இடம்பெறவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய நபர்கள் கொழும்பிலும் ஒருசிலர் நாட்டிலும் இல்லாத நிலையில் நேற்றைய சந்திப்பு இடம்பெறவில்லை. 
இந்நிலையில் இன்று  பாராளுமன்றம் கூடுகின்ற நிலையில் காலை 10 மணிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டம் கூடுகின்றது. எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் தலைமையில் இன்றைய தினம் இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மேலும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் நிலைப்பாடுகள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்தே தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். இதில் தனித்தனி தீர்மானங்களை முன்வைக்க முடியாது. ஆகவே நாளை காலை எமது சகல உறுப்பினர்களையும் சந்தித்து ஆழமாக சிந்தித்து நல்லாட்சி நிலைப்பாடுகளையும் கருத்தில் கொண்டு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்மானங்களை நாம் முன்னெடுப்போம் என அவர் குறிப்பிட்டார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.