தென் கொரியாவில் ஓங்கி ஒலித்த தமிழர்கள் குரல்!


தென் கொரியாவின் பல்வேறு நகரங்களில் வசிக்கும் தமிழர்கள் சிறு சிறு குழுக்களாக சேர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், மீத்தேன் திட்டத்தை எதிர்த்தும், ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராகவும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வடக்கே சோல் முதல் தெற்கே புசான் வரை, சோல், சுஒன், தேஜான், தேகு, பூசான் , சுன்ச்சோன், கொஜே தீவு, சொஞ்சூ, சொனான்  மற்றும் உல்சான் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
நிகழ்வில் பதாகைகள் ஏந்தியும், உறுதிமொழி ஏற்றும் தீர்மானங்களை வாசித்தும் தங்கள் ஆதரவை காட்டினர் தென் கொரியாவில் வசிக்கும் தமிழ் மக்கள்.
ஸ்டெர்லைட் தொடர்பான செய்திகளைப் படிக்க:
உறுதிமொழி
அந்த நிகழ்வில் அவர்கள் ஏற்றுக் கொண்ட உறுதி மொழி: “அறத்தின் வழி வந்த மூத்தோர் நாங்கள். அறிவு உலகின் விதைகள் நாங்கள் தீமையின் கொடுநாவை பொசுக்கும் வேங்கைகள் உயிர்கள் அனைத்திற்கும் தமிழர் காவல் ஞானியர் பேரொளியும் இயற்கையின் வலிமையும் உலகோர் நட்பும் எமக்கு அரணாய் அமையும்.” என்பதாக இருந்தது.
பின்பு இந்த ஆர்ப்பாட்டத்தில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
தீர்மானங்கள்
“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதை பெருமதிப்பிற்குரிய உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.
 தமிழ் நாட்டின் உணவு உற்பத்தி நடைபெறும் மிகமுக்கிய இடமான தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதியில் ஐட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை நடுவண் அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலை உடனடியாக மூடப்பட வேண்டும்.
தமிழகத்தின் தேனியின் அருகே பொட்டியாபுரம் மலையைக் குடைந்து அமைக்கப்படும் நியூட்ரினோ திட்டம் குறித்து மக்களுக்கு எழுந்திருக்கும் ஐயம் முறையாக தீர்க்கப்படும்வரை அந்த திட்டத்தை முன்னெடுத்து செல்வதை அரசு நிறுத்தி தீவிர மறுசிந்தனை செய்ய வேண்டும்” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.