காணாமல் போனோர் பணிமனையின் முதலாவது அமர்வு மன்னாரில்!

காணாமல் போனோர் பணிமனையானது, எதிர்வரும் 12ம் திகதி முதல் மாவட்ட ரீதியான விஜயத்தினை ஆரம்பிக்கவுள்ளது. அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஷ்  தெரிவித்தார்.

 அதற்கமைய, மன்னார் மாவட்ட செயலகத்தில் அடுத்த மாதம் 12 ஆம் திகதி அதன் முதலாவது மாவட்ட அமர்வு ஆரம்பமாகவுள்ளது.

 இதன்போது, காணால் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரை சந்திக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 இதையடுத்து, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி, மாத்தளை மற்றும் மாத்தறை முதலான பகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

 இதேவேளை, காணாமல் போனோரை தேடி அறிவதற்கான பிரத்தியேக பிரிவு ஒன்று உருவாக்கப்படும் என்று காணாமல் போனோர் பணியகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஷ், தெரிவித்தார்.

 காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை அறிவதே இந்த பணிமனையின் முக்கிய நோக்கமாகும். அதன்படி விசாரணை நிபுணர்கள் மற்றும் தடயவியலாளர்கள் போன்றோரை உள்ளடக்கியதாக இந்த பிரிவு நியமிக்கப்படவுள்ளது. தற்போது இந்த பணிமனைக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அதனை அடுத்து காணாமல் போனோரை தேடி அறியும் பிரிவும் நியமிக்கப்படும்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.