தூத்துக்குடியில் தமிழர் படுகொலையை கண்டித்து – யாழில் போராட்டம்!!
இந்தியாவின் தூத்துக்குடியில் தமிழக பொலிஸாரால் சுட்டுக்கொலைசெய்
யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு நீதிவேண்டியும், தமிழக பொலிஸாரின் கண்மூடித்தனமான தாக்குதல்களைக் கண்டித்தும் நேற்றுப் போராட்டம் நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் மைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக போராட்டம் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதை ஏற்பாடு செய்தது.
“முள்ளிவாய்க்காலின் வெறித்தனம் தூத்துக்குடியிலுமா, ஈழத்தை போன்று தமிழகத்தையும் ஆக்காதே, பணமுதலைகளுக்கு தமிழன் பலிக்கடாவா, தமிழர்களின் உயிரை விட ஆலை அவசியமா “ போன்ற கோசங்கள் எழுப்பட்டன. உயிரிழந்தவா்களுக்காக மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கருத்து தெரிவித்த வணபிதா ராஜ்குமார் “அகிம்சை வழியிலான ஜனநாயக ரீதியான எங்கள் மக்களுடைய போராட்டம் நசுக்கப்பட்டிருக்கின்றது. அந்த நாட்டு அரசு சொந்த இன மக்களையே மிருகத்தை சுடுவதுபோன்று குறிபாத்து சுட்டமையை எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மறைமாவட்ட ஆயரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இவற்றை ஏற்றுக்கொள்ளமுடியாது. இவற்றையெல்லாம் கடந்துவந்தவர்கள் நாங்கள். போராடுவதற்குக் காரணம் டெல்லி அரசு. தமிழின மக்களை ஒரு வன்முறைக்குள்ளாக ஜனநாயக வழியில் போராடுவதை நசுக்க இடமளிக்க கூடாது.” என்றார்.
தொடர்ந்து தனது கண்டனத்தை தெரிவித்த சட்டத்தரணி சுகாஸ் “எங்களுடைய தொப்பிள்கொடி உறவுகள் வாழுகின்ற தமிழக மண்ணிலே, தூத்துக்குடியில் அரங்கேறிய இந்தத் தமிழினப் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஜனநாயக முறையில் அகிம்சை வழியிலே தங்களுடைய கோரிக்கையை முன்வைத்த மக்களுக்கு துப்பாக்கி ரவைகள் பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றது. சுத்தமான காற்றுக்கேட்டவா்களுக்கு கிடைத்ததோ துப்பாக்கி குண்டுகள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசம் என்று வா்ணிக்கப்படுகின்ற இந்திய தேசத்தில் இது நடந்தேறியிருக்கிறது. பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும். நீதி வழங்கவேண்டும் என்று தமிழக மாநில அரசையும் இந்திய மைய அரசையும் வேண்டுகிறோம். நாங்கள் கடந்த காலத்தில் இனப்படுகொலையை எதிர்கொண்டபோது எங்களுக்காக எங்கள் தமிழக சகோதரர்கள் தீக்குளித்ததையும் மறக்கவில்லை. எங்கள் உறவுகளே உங்கள் துன்பத்திலும் உங்கள் கவலையிலும் உங்களுக்கு தோளோடு தோள் நிற்க்க நாங்கள் தயாராக நிற்கின்றோம்” என்று சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.
“இந்தப் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறோம். போராட்டத்தை ஒருங்கிணைத்த ஒருங்கிணைப்பாளர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். கலவரம் இன்றி திட்டமிட்டு படுகொலை இடம்பெற்றிருக்கின்றது. பொலிஸார் நடந்து கொண்ட விதத்தை பார்க்கும்போது இந்தியாவில் ஜனநாயகம் இருக்கின்றதா என்று கேட்கத் தோன்றுகிறது” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியின் செயலாளா் செ.கஜேந்திரன் தெரிவித்தார்.
தமிழ்தேசிய மக்கள் முன்ணணியின் செயலாளா் செ.கஜேந்திரன், யாழ் மாநகரசபை உறுப்பினா் வி.மணிவண்ணன், சட்டத்தரணி க.சுகாஸ், மதத்தலைவா்கள்,பிரதேசசபை உறுப்பினர்கள்,பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்
தமிழ்தேசிய மக்கள் முன்ணணியின் செயலாளா் செ.கஜேந்திரன், யாழ் மாநகரசபை உறுப்பினா் வி.மணிவண்ணன், சட்டத்தரணி க.சுகாஸ், மதத்தலைவா்கள்,பிரதேசசபை உறுப்பினர்கள்,பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்
கருத்துகள் இல்லை