வாகரையில் இராணுவ வீரர் தற்கொலை!

மட்டக்களப்பு - வாகரை பிரதேசம், பணிச்சங்கேணி 18 ஆவது இராணுவ படைப்பிரிவில் கடமையாற்றி வந்த இராணுவ வீரர்  ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியினால் சுட்டு தற்கொலை செய்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தானை பிரதேசத்தினை சேர்ந்த 24 வயதான வீ.எம்.என். சஞ்ஜீவ  என்ற இராணுவ வீரரே  இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வழமைக்கு மாறாக இன்று  அதிகாலை இராணுவ முகாமில் துப்பாக்கி சத்தம் கேட்டதனையடுத்து சக இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது குறித்த இராணுவ வீரர் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளார்.
உடனடியாக இரத்த வெள்ளத்தில் கிடந்த இராணுவ வீரரை மீட்டு வாகரை பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த போதிலும் குறித்த இரணுவ வீரரின் உயிரை காப்பாற்ற முடியாது போயுள்ளது.
தற்போது சடலம் வாகரை பிரதேச வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் வாகரை பொலிஸார்  தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.