பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட கந்தப்பளை சிறுமிகள்!

நுவரெலியா - கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார்க் தோட்டத்தைச் சேர்ந்த 13,14,16 வயதுகளுடைய சிறுமியர் மூவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் அச்சிறுமிகள் இருவரின் தந்தை உட்பட நான்கு பேரை கந்தப்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

47,55,36,28 வயதுகளை உடைய நான்கு சந்தேக நபர்களையே இவ்வாறு கைது செய்ததாகவும் அவர்களை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 
துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாகக் கூறப்படும் சிறுமிகளில் 13,16 வயதுகளுடைய இருவரும் சகோதரிகள் என குறிப்பிட்ட பொலிஸார் 14 வயதுடைய சிறுமி அவர்களின் சிறிய தாயின் மகள் என்றும் அவர் அயல் வீட்டிலேயே வசித்து வந்துள்ளதாகவும்  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் சிறுமியர்களால் பெயர் குறிப்பிட்டப்பட்ட நால்வரையே கைது செய்ததாகவும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் முன்று சிறுமிகளும் சட்ட வைத்திய பரிசோதனைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்சமயம் அவர்கள் வைத்தியசாலையிலேயே இருப்பதாகவும் கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி கந்தப்பளை பார்க் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் கொழும்புக்கு தப்பி வந்துள்ளனர். இம்மூவரும் கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள இடமொன்றில் எங்கு செல்வது என்று தெரியாது இரவு வேளையில் நிர்க்கதியான நிலையில் இருப்பதை கோட்டை  பொலிஸார் அவதானித்துள்ளனர்.
அவர்களை பொலிஸ் பொறுப்பில் எடுத்து கோட்டை நீதிவான் லங்கா ஜெயரத்ன முன்னிலையில் ஆஜர் செய்துள்ளனர். இதன் போது மூன்று சிறுமியரையும் சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ள நீதிவான், அச்சிறுமியரின் வதிவிடம் நுவரெலியா நீதிமன்ற அதிகாரப்பரப்புக்கு உட்பட்டுள்ளமையால் சிறுவர் நன்நடத்தை பிரிவு ஊடாக நுவரெலியா நீதிமன்றில் அவர்களை ஆஜர் செய்யவும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் கோட்டை பொலிஸாரும் சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு பிரிவினரும் அச்சிறுமியரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர். இதன் போது தாம் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை சகித்துக் கொள்ள முடியாமல் வீட்டிலிருந்து தப்பி கொழும்புக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு பிரிவினர் 3 சிறுமியரையும் நுவரெலியா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி விடயங்களை நீதிவான் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக நுவரெலியா நீதிவானின் ஆலோசனைக்கமையவும் கோட்டை பொலிஸார் விடுத்த அறிவுறுத்தலுக்கு அமையவும் கந்தப்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். நுவரெலியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சர் மஹிந்த திசாநாயக்கவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சிறுமியர்களிடம் கந்தப்பளை பொலிஸாரும் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
இதன் பின்னரே சிறுமிகளை சட்ட வைத்திய பரிசோதனைகளுக்காகவும் சிகிச்சைகளுக்காகவும் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதித்த பொலிஸார் உடன் செயற்பட்டு வாக்கு மூலத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட நான்கு சந்தேக நபர்களை கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை வரை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றிருக்காத நிலையில் இந்த பாலியல் துஷ்பிரயோக சம்பவத்துடன் சிறுமியரின் தாய்மாருக்கு ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்திலும்  மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.