சம்பந்தன் நேர்மையானவர்ரா??!

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஒரு நேர்மையான
அதேபோல் கொள்கையுடன் பயணிக்கும் அரசியல் வாதியாவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணியினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இரா. சம்பந்தன் கூறும் காரணங்களை சிங்கள மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட சுயாதீன அணியினர் இன்று சந்தித்து பேசியிருந்தனர். இந்த சந்திப்பு எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட சுயாதீன அணியினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசுகையில்,

“எதிர்காலத்தில் நடைபெறும் அரசியல் காரணிகளில் நாம் எவ்வாறு செயற்படுவோம் என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுடன் இன்றைய சந்திப்பில் கலந்துரையாடினோம்.

தமிழ் மக்களின் தலைவர் என்ற வகையிலும் அனுபவமிக்க அரசியல்வாதி என்ற வகையிலும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் எமக்கு முன்வைத்த காரணிகளை அனைத்தையும் இந்த நாட்டின் சிங்கள பெரும்பான்மை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கையராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். பிரிவினைவாதம் வேண்டாம். அனைத்து தரப்பையும் இணைத்து வெற்றிகொள்ள வேண்டும் என அவர் கூறியமை முக்கியமானதாகும்.

இந்த நிலைப்பாட்டினை எட்டவே கடந்த காலங்களில் கடுமையாக போராட வேண்டிய தேவை இருந்தது. ஆனால் இன்று அவர்களின் நிலைப்பாடுகள் நாட்டினை ஐக்கியப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது.

தமிழ் தலைமைகளே இவ்வாறான நிலைப்பாட்டில் இருந்து செயற்பட்டு வருகின்ற நிலையில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் இந்த நிலைபாட்டினை செவிமடுக்காத காரணத்தினாலேயே இந்த நாடு குழப்பமடைந்தது என்பதை மீண்டும் சிந்திக்க வேண்டும்.

சம்பந்தன் ஒரு நேர்மையான அதேபோல் கொள்கையுடன் பயணிக்கும் அரசியல் வாதியாவார். ஆகவே எம்முடனான சந்திப்பில் அவர் முன்வைத்த காரணிகள் மிகவும் முக்கியத்துவமானவையாகும்.

ஆகவே அவருடன் நடந்த இந்த பேச்சுவார்த்தையை எமது அரசியல் பயணத்திலும் அதேபோல் நாட்டின் அரசியல் பயணித்திலும் மிகவும் மகத்துவம் வாய்ந்த ஒன்றாகவே கருதுகின்றோம் என்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.