முல்லைதீவில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் குறித்து தீர்வு எட்டவில்லை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமுள்ள நிலங்கள் தொடர்பிலும் அதன் சரியான அளவுகள் தொடர்பிலும் ஆராயும் நோக்கில் நாளை மறுதினம் மாவட்டச் ணெயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

வடக்கு  மாகாணத்தில் படையினர் வசமுள்ள நிலங்கள் தொடர்பில் சகல மாவட்டச் செயலாளர்களையும் அழைத்து ஜனாதிபதியின் செயலாளர் தலமையில் விசேட சந்திப்பொன்று கடந்த ஏப்பிரல் 17ம் திகதி  ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இதில் வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட மாவட்டச் செயலாளர்கள் படைத் தளபதிகள் , வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர்கள் , வடக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் , மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஆகியோர்  கலந்துகொண்ட குறித்த சந்திப்பில் படையினரால் இதுவரை விடுவிக்கப்பட்ட நிலப்பரப்புக்கள் தற்போதும் படைவசமுள்ள நிலங்கள் இதில் படையினரால் விடுவிப்பதாக இணக்கம் கானப்பட்ட நிலங்கள் தொடர்பில் மாவட்ட ரீதியில் கவனம் செலுத்தப்பட்டது.

இருப்பினும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களிற்குச் சொந்தமான  1150 ஏக்கர் நிலம் மட்டுமே படையினர் வசம் உள்ளதாக படைத்தரப்பு சுட்டிக்காட்டியிருந்த நிலையில் தமது தகவலின் பிரகாரமும் மக்களின் கூற்றுப்படியும் குறித்த அளவானது மிகத் தவறானதாக உள்ளது என மாவட்டச் செயலாளர்   மற்றும் மாகண பிரதம செயலாளர் ஆகியோர் சுட்டிக்காட்டியிருந்தனர். இதன் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமுள்ள நிலங்கள் தொடர்பில் மாவட்டத்திற்கு நேரடியாகச் சென்று மாவட்டச் செயலாளர் தலமையில்ஓர் விசேட சந்திப்பில் சரியான அளவை இனம்கானுமாறு கூறப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் முப்படையினர் நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் வடக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் பி்தேச செயலாளர்களை உள்ளடக்கிய விசேட கூட்டம் எதிர்வரும் 8ம் திகதி மாவட்டச் செயலகத்தில் இடம்பெறவுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.