காணி விடுவிப்பு தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்!

யாழ்.மாவட்டத்தில் படையினர்வசம் உள்ள காணிகள் தொடர்பான தகவல்களை கேட்டறிந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு சென்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதன் பின்னர் காணி விடுவிப்பு தொடர்பில் அறிவிப்பதாக கூறியுள்ளார். 

இருநாள் விஜயமாக யாழ்.வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ​நேற்று (29) யாழ்.மாவட்ட செயலகத்தில் முப்படையினர் மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். 

இந்த கலந்துரையாடலில் ஊடகங்கள் எவையும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தகவல் தரும்போதே மேற்படி விடயத்தை கூறியுள்ளனர். 

இது தொடர்பாக மேலும் அவர்கள் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் படையினர்வசம் உள்ள மக்களுடைய காணிகள் தொடர்பான தகவல்களை பிரதமர் கேட்டறிந்து கொண்டார். குறிப்பாக வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகள், மற்றும் மண்டைதீவில் கடற்படையின்வசம் உள்ள காணிகள், மக்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள படைமுகாம்கள் தொடர்பான தகவல்களை தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமர்பித்திருக்கின்றனர். 

அவற்றை கேட்டறிந்து கொண்ட பிரதமர் கொழும்பு சென்றதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுடன் கலந்துரையாடிய பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைள் குறித்து தெரிவிப்பதாக கூறியுள்ளார். 

மேலும் பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிப்பது தொடர்பாகவும், பலாலி விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பாகவும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசியுள்ளனர். 

எனினும் பலாலி விமான நிலையத்திற்காக எடுக்கப்பட்டிருக்கும் காணிகள் திருப்பி கொடுக்கப்படமாட்டாது. காரணம் பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரம் உயர்த்துவதற்கு இந்தியா இணங்கியுள்ளதாக பிரதமர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. எனினும் விமான நிலையத்திற்காக மேலதிக காணிகள் எவையும் எடுக்கப்படக்கூடாது என தமிழ்தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

இதேவேளை வடமாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் நகர்புறங்களில் படையினர் வசம் உள்ள 600 ஏக்கர் காணி விடுவிக்கப்படுவதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை பிரதமர் விடுப்பார் என மீள்குடியேற்ற அமைச்சு வட்டாரங்கள் கூறியிருந்தபோதும் அவ்வாறான அறிவிப்பு எதனையும் பிரதமர் விடுக்கவில்லை. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.