பெயர் மாற்றம் தண்ணீர் தராது!

பெயர் மாற்றம் தண்ணீர் தராது, அணைகளை நிர்வகிக்கும் அதிகாரமே சிக்கலை தீர்க்கும் என அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவுத் திட்டத்தின் திருத்தப்பட்ட வடிவத்தை  உச்சநீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது. வரைவுத் திட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவற்றால் பயனில்லை.
மத்திய அரசு அமைக்கவுள்ள புதிய அமைப்புக்கு காவிரி மேலாண்மை ஆணையம் என்று பெயரிடப்படும்; காவிரி நீர்ப்பகிர்வு குறித்த சிக்கலில் ஆணையத்தின் முடிவே இறுதியானது;  மேலாண்மை ஆணையத்தின் தலைமை அலுவலகம் பெங்களூவுக்கு பதிலாக தில்லியில் அமைக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தங்கள் அனைத்தும் மத்திய அரசு தானாக முன்வந்து செய்தவை அல்ல. மாறாக, உச்சநீதிமன்ற ஆணைப்படி செய்யப்பட்ட திருத்தங்கள் தான் இவை. இவற்றில் காவிரி ஆணையத்தின் தலைமை அலுவலகம் தில்லியில் அமைக்கப்படுவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். கர்நாடகத்தில் தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தால், ஆணையத்தில் பணியாற்றும் வல்லுனர்களும், அதிகாரிகளும் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டிருக்கும். இப்போது அது தவிர்க்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் மற்ற இரு திருத்தங்களும் தமிழகத்திற்கு சாதகமானவை போன்று தோன்றினாலும்  அது உண்மையல்ல. புதிய அமைப்பு எந்த பெயரால் அழைக்கப்படுகிறது என்பது முக்கியமல்ல... அவற்றுக்கு எந்த அளவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது என்பது தான் முக்கியமாகும். காவிரி அமைப்புக்கு ஆணையம் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், அதற்கு என்ன அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது? என்பது தான் வினா. காவிரி பிரச்சினையில் ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானது  என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், காவிரி ஆணையத்திற்கு முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தும் அதை செயல்படுத்தும் அதிகாரம் இருந்தாலும் கூட, செயல்படுத்தும் அதிகாரம் இல்லாவிட்டால் அதனால் என்ன பயன்? அத்தகைய சூழலில் முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டு என்ன செய்ய முடியும்?
உதாரணமாக, அடுத்த மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு கர்நாடகம் சுமார் 134 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், இந்த 4 மாதங்களில் கர்நாடக அணைகளில் ஒட்டுமொத்தமாகவே 200 டி.எம்.சி தான் தண்ணீர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அத்தகைய சூழலில் தமிழகத்திற்கு 80 டி.எம்.சி அல்லது 100 டி.எம்.சி. வழங்க வேண்டும் என்று இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு தான் உண்டு என்பது தான் மத்திய அரசின் நிலைப்பாடு. அவ்வாறு ஆணையம் முடிவெடுத்து அறிவிக்கும் போது அதை கர்நாடக அரசு ஏற்றுக்கொள்ளுமா? என்பது தான் தமிழக மக்களின் கேள்வி. கர்நாடகம் ஏற்றுக் கொள்ளாது என்பது தான் எதார்த்தம்.கடந்த காலங்களில் உச்சநீதிமன்றம் பலமுறை ஆணையிட்டும் காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காத கர்நாடகம் இந்த ஆணையத்தின் முடிவை மதிக்குமா?
அதேநேரத்தில் காவிரி ஆணையத்திற்கு அணைகளை நிர்வகிக்கும் அதிகாரம் இருந்தால், இந்த முடிவை ஆணையமே செயல்படுத்தும். அப்போது தமிழகத்திற்கு நியாயமான அளவில் தண்ணீரும் கிடைக்கும். இத்தகையத் தீர்வைத் தான் தமிழக மக்களும், விவசாயிகளும் கோருகிறார்கள். காவிரி நடுவர் மன்றமும் இதே தீர்வைத் தான் வழங்கியது. ஆனால், மத்திய அரசு அதன் கர்நாடக ஆதரவு நிலைப்பாடு காரணமாக, அந்த மாநிலத்தின் கட்டுப்பாட்டிலேயே கர்நாடக அணைகள் இருக்கும்படி வரைவுத் திட்டத்தை மத்திய அரசு தயாரித்துள்ளது. இப்படி எந்த அதிகாரமும் இல்லாத அமைப்பை உருவாக்கி விட்டு, அதற்கு பெயரை மட்டும் கவர்ச்சிகரமாக சூட்டினால் என்ன பயன்? அரளிப் பூவுக்கு ரோஜா என்று பெயர் மட்டும் சூட்டினால் அதை எப்படி தலையில் சூட்டிக்கொள்ள முடியாதோ, அதேபோல் தான் புதிய அமைப்புக்கு ஆணையம் என்று பெயர் சூட்டினால் மட்டும் காவிரி நீர் வந்து விடாது.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள திருத்தப்பட்ட வரைவுத் திட்டத்தை விட மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவெனில் இனி எந்த வாதத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது  காவிரி நடுவர் மன்றம் அறிவித்தது போன்ற அனைத்து அதிகாரங்களுடன் கூடிய ஆணையம் அமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டிருந்தனர். காவிரி நடுவர் மன்றம் அறிவுறுத்தியவாறு திருத்தப்பட்ட வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்படாத நிலையில், அதுகுறித்து வாதிட அனுமதி மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.
எனவே, காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் நிர்வகிக்கும் அதிகாரத்துடன் தான் காவிரி ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இதற்குக் குறைவான எந்தவொரு அமைப்பையும் தமிழ்நாடு அரசு ஏற்கக்கூடாது; உச்சநீதிமன்றமும் அதை அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்துகிறேன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.