துடைப்பக்கட்டையால் அடித்து நேர்த்திக்கடன்!

ஆண்டிபட்டி அருகே முத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாமன், மச்சான் உறவு வலுப்பெற துடைப்பக்கட்டைகளால் அடித்து விநோத நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் விரதமிருந்து காப்புக்கட்டி, தீச்சட்டி, பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மாமன் மச்சான்கள் ஒருவொருக்கொருவர் துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.

விழா குறித்து ஊர் பிரமுகர் பிரபு கூறுகையில், ‘‘மூன்று நாள் நடக்கும் இந்த விழாவுக்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலத்தில் உள்ள உறவினர்கள் ஒன்று சேர்வர். மாமன் மச்சான்களிடையே ஏற்பட்டுள்ள விரிசல்களை தவிர்க்கவும் அனைவரும் ஒன்று கூடி அம்மனை வழிபட்டு சேத்தாண்டி வேடமிட்டு ஒருவரை ஒருவர் துடைப்பத்தால் மாறி, மாறி அடித்துக் கொள்வர். இதன் மூலம் உறவுகளிடையே ஒற்றுமை வலுப்பெறும் என்ற ஐதீகம் நெடுங்காலமாக இருந்து வருகிறது,’’ என்றார். இந்த விநோத நிகழ்ச்சியை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.