சிவன் கோயிலில் எப்படி வழிப்பட வேண்டும்..?

பக்தர்கள்,சிவன் ஆலய வழிபாட்டை இப்படிதான் மேற்கொள்ள வேண்டும் என பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் முறையாக வகுத்து வைத்துள்ளனர். ஆனால் இந்த வழிமுறையை பக்தர்கள் பின் பற்றுகின்றனரா என்பது சந்தேகம் தான். காரணம் சிலருக்கு வழிபடும் முறை தெரிவதில்லை. 
சிவாலயத்திற்கு செல்லும்போது பக்தர்கள் தூய்மையான உடைஅணிந்து, வீபுதி பூசிக்கொண்டு, சிவ பாராயனங்களை மனதில் நினைத்துச் செல்ல வேண்டும், அசுத்த எண்ணங்களை மனதில் இருந்து போக்க வேண்டும். 
சிவ கோபுரத்தை தூல லிங்கம் என்பார்கள். எனவே இரண்டு கைகளையும் தலை மேல் குவித்து முதலில் கோபுர தரிசனம் செய்ய வேண்டும்.
பலிபீடத்தின் முன்பாக வீழ்ந்து வணங்க வேண்டும். கிழக்கு அல்லது மேற்கு நோக்கிய திருக்கோயில் என்றால் வடக்கு நோக்கியும், வடக்கு அல்லது தெற்கு நோக்கிய கோயில் என்றால் கிழக்கிலும் தலை வைத்து வணங்க வேண்டும்.
ஆண்கள் தங்கள் எட்டு உறுப்புகள் நிலத்தில் படும்படி வீழ்ந்து வணங்க வேண்டும். எட்டு உறுப்புகள் என்பது தலை, 2 கைகள், 2 செவிகள், மேவாய், 2 புயங்கள். இரு செவிகளும் நிலத்தில் பட வேண்டும் என்றால் தலையை இரு பக்கமும் திருப்பி நிலத்தில் படுமாறு வணங்க வேண்டும்.
பெண்கள் ஐந்து உறுப்புகள் நிலத்தில் படும்படி வீழ்ந்து வணங்க வேண்டும். அந்த ஐந்து உறுப்புகள் தலை, 2 கைகள், 2 முழந்தாள். பிறகு இரு கரங்களையும் மார்பின் மேல் குவித்து, சிவனை எண்ணிக்கொண்டே திருக்கோயில் சுற்றினை மூன்று முறை வலம் வர வேண்டும். ஐந்து, ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கையிலும் வலம் வரலாம். இப்படி சிவனை வணங்குவதால் அவரின் ஆசி முழுமையாக கிடைக்கும் என்பது சித்தர்களின் வாக்கு. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.