ரஜினியின் வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது!

தூத்துக்குடி கலவரத்துக்கு விஷக்கிருமிகள், சமூக விரோதிகள்
புகுந்ததுதான் காரணம் என்று கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தை சில அமைப்புகள் முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்தார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், துப்பாக்கிச்சூடு வன்முறைக்கு சில விஷக்கிருமிகளும் சமூக விரோதிகளே காரணம் என்று கூறினார்.

சென்னை திரும்பிய ரஜினி, செய்தியாளர்களிடம், போராட்டத்தின் கடைசி கட்டத்தில் உள்ளே புகுந்து கெடுத்தது சமூக விரோதிகள்தான். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் சமூக விரோதிகள் உள்ளே புகுந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். போலீசாரை தாக்கிய பின்புதான் பிரச்சனையே தொடங்கியது. போலீஸ் உடையில் இருப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஒருபோதும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் செய்தியாளர்கள் மத்தியில் ஆவேசமாக பேசினார்.

அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ரஜினியின் இந்த பேச்சு பல்வேறு தரப்பினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஒரு சில அமைப்புகள் ரஜினியின் வீட்டை முற்றுகையிட திட்டமிட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரஜினியின் இல்லத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இன்று மாலை 4.30 மணியளவில் போயஸ் கார்டன் அருகே உள்ள ரஜினிகாந்த் வீட்டை, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் முற்றுகையிட முயன்றனர். ராதாகிருஷ்ணன் சாலையில், டிடிகே சாலை அருகில் அவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் ரஜினிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.