பிரான்சில் சிறப்பாக இடம்பெற்று முடிந்த தமிழ்மொழி பொதுத்தேர்வு- 2018!

தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தினால் பிரான்சில்
நடாத்தப்படும் தமிழ்மொழி பொதுத்தேர்வு 2018 பிரான்சின் அரச தேர்வு மண்டபத்தில் (Maison des examens 7 Rue Ernest Renan, 94110 Arcueil ) நேற்று (02.06.2018) சனிக்கிழமை பகல் 13.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுமுடிந்தது.

அகவணக்கத்தைத் தொடர்ந்து, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு.மகேஸ், தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவை மேலாளர் திருமதி நகுலேசுவரி அரியரட்ணம், தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார், தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத் தேர்வுப் பொறுப்பாளர் திரு.அகிலன் மற்றும் ஏற்பாட்டாளர்கள், நடத்துநர்கள் முன்னிலையில் தேர்வு நடத்துநர்கள் மற்றும் மாணவர்களால் கையொப்பமிடப்பட்டு தேர்வு வினாத்தாள்கள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்வு ஆரம்பமானது.
வழமைபோன்று தேர்வுகளில் முதல் பிரிவு மாணவர்கள் தேர்வை எழுதியபின் வெளியேறும்போது அடுத்த பிரிவுக்குரிய மாணவர்கள் உள்நுழைந்தார்கள் எனினும் எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு ஒழுங்கமைப்புக்கள் செய்யப்பட்டிருந்தன.
இம்முறை பெரும்பாலான பரிசின் புறநகர் பகுதி பாடசாலைகள் பிரத்தியேகமாக பேருந்துகளை ஒழுங்கு செய்து தமது மாணவர்களை அழைத்து வந்திருந்ததுடன் மாணவர்களை நேர்த்தியாக ஒழுங்குபடுத்தி தேர்வுக்கு அனுப்பிவைத்திருந்தனர்.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அதன் உப கட்டமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் மண்டபத்திற்கு வெளியே மாணவர்களை ஒழுங்கமைப்பதில் நேர்த்தியாக ஈடுபட்டிருந்தனர். வழமைபோன்று இம்முறையும் பிரான்சு அரச தேர்வு மண்டபத்தில் பெரும் எண்ணிக்கையான பெற்றோர்கள் வெளியில் காத்திருக்க வெளிநாட்டவர்கள் என்ன நடக்கின்றது என்று அதிசயிக்கும் அளவிற்கு தேர்வு மண்டபத்தை சூழ, காணும் இடமெல்லாம் எம் தமிழ் மக்கள் அலையெனத் திரண்டிருந்தனர். அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் காணப்பட்டது.
மண்டபத்தினுள் தமிழ்ச்சோலை பள்ளி ஆசிரியர்களும் செயற்பாட்டாளர்களும் தமது கடமைகளைத் திறப்பட நடாத்தியிருந்தனர்.
இம்முறை பிரான்சில் தொடருந்து வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெற்றபோதும் மாணவர்கள் உரிய நேரத்திற்கு முன்பதாக வருகைதந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
RER B தொடருந்தில் தமிழ் மக்களே பெரும் எண்ணிக்கையில் தேர்வு மண்டபப் பகுதியில் வந்து இறங்குவதைக் காணமுடிந்தது.
பிரான்சின் வெளிமாவட்டங்களான Nice, Beau Soleil, Toulouse, Rennes,Tours, Gien, Strasbourg, Mulhouse, Pau, Bordeaux ஆகிய இடங்களிலும் குறித்த தமிழ்மொழி பொதுத் தேர்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பிரான்சில்  Île De France மற்றும் பிரான்சின் வெளிமாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 5 ஆயிரத்து 894 பேர் இம்முறை தேர்வுக்குத் தோற்றியுள்ளதாக தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினர் தெரிவித்துள்ளனர்.

(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.