சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும்!

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிராகவும் மரண தண்டனை அமுல்படுத்த வேண்டும் என வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“போதைப்பொருள் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான முடிவுக்கு அரசங்கம் வந்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான கையொப்பம் இடுவதற்கு தயாராக இருப்பதாகவும், அமைச்சரவை அதற்கான அனுதியை வழங்கியுள்ளதாகவும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. இதனை நாம் வரவேற்கின்றோம்.

யுத்தத்திற்கு பின்னரான நிலைமையில் குறிப்பாக வட மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதோடு கடத்தல்களும், வர்த்தகங்களும் தராளமாகியுள்ளன. இதற்கான சூத்திரதாரிகள் தற்போது வரையில் இனங்காணப்படாதவர்களாகவே இருக்கின்றார்கள்.

ஒன்றரை இலட்சம் இராணுவம் வடக்கில் தங்கியிருக்கின்றபோதும் போதைப்பொருளுடன் தொடர்புடைய செயற்பாடுகள் தாராளமான இடம்பெற்று வருகின்றமை எமக்கு பாரிய சந்தேகத்தினை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆகவே அது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் எடுக்க வேண்டியது அவசியமாகின்றது.

இதேவேளை போதைப்பொருள் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது போன்று சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு இத்தகைய கடுமையான சட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகின்றது. வட மாகாணத்தினைப் பொறுத்தவரையில் சிறுவர் பாலியல் வன்புனர்வுச்செயற்பாடுகள் யுத்தத்தின் பின்னரான காலத்தில் அதிகரித்துள்ளன.

அதிலும் வித்தியா, ரெஜினா போன்ற சிறுமியர்களின் மரணம் வடக்கினை மட்டுமல்ல உலகத்தினையே உலுக்கியுள்ளவையாக இருக்கின்றன. இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது தடுப்பதற்கு சட்டங்கள் கடுமையானவையாக இருப்பதோடு அவற்றினை பரபட்சமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதும் எனது கோரிக்கையாக இருக்கின்றது. மேலும் நீதி அமைச்சரும் ஒரு பெண்ணாக இருப்பதால் இந்த விடயத்தினை அவர் நன்கு புரிந்து கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்” எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.