கருணாநிதிக்கு என்ன நடக்கிறது??

திமுகவின் ஐம்பதாண்டு கால தலைவர், தமிழகத்தின் ஐந்து முறை முதல்வர், இன்று இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் இப்படி பல அடைமொழிகளுக்குச் சொந்தக்காரரான மு.கருணாநிதி,சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து நாட்டின் கடைகோடி குடிமகனான கிராமத்து உடன்பிறப்பு வரை, கருணாநிதியின் உடல் நலம் குறித்து பதற்றத்தோடு விசாரித்து அவர் குணமடைய வேண்டும் என்று தங்கள் விருப்பங்களையும் வேண்டுதல்களையும் முன் வைத்து வருகின்றனர்.

கருணாநிதியின் உடல் நலம் எப்படி இருக்கிறது?

2016 அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி திமுக சார்பில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அதனால், அவரைப் பார்க்க வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்போது முதல் தனது வெளிப் பயணத்தை குறைத்துக் கொண்ட திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்திலேயே ஓய்வெடுத்து வந்தார்.

கடந்த 2016 டிசம்பர் 1 ஆம் தேதி நீர்ச் சத்து குறைபாடு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் இல்லம் திரும்பினார். சில நாட்கள் கழித்து மீண்டும் டிசம்பர் 15 ஆம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு முதுமை காரணமாக சளித்தொல்லையும், சுவாசக் கோளாறும் இருந்தது. அதனால் அப்போது அவருக்கு “டிரக்கியோஸ்டோமி” சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர்.

முதுமை காரணமாக கருணாநிதியின் நுரையீரல் தனது செயல் திறனைக் குறைத்துக் கொண்டிருப்பதால் அவரது சுவாசத்தில் பிரச்னை ஏற்பட்டது. மேலும் சளித் தொல்லையும் அவரது சுவாசத்துக்குப் பிரச்னையாக இருந்தது. இதனால், “டிரக்கியோஸ்டோமி எனப்படும் செயல்முறைப்படி அவரது தொண்டையில் துளையிடப்பட்டு சுவாசக் குழாயோடு செயற்கை குழாய் ஒன்று இணைக்கப்பட்டது. இதன் மூலம் சளி உறிஞ்சப்பட்டு வெளியே எடுக்கப்படும். மேலும் நுரையீரலின் செயல்பாட்டை இந்த கருவி ஊக்கப்படுத்துவதால் சுவாசம் சீராகும். இந்த சிகிச்சைக்குப் பின் டிசம்பர் 23 ஆம் தேதி வீடு திரும்பினார் கருணாநிதி.

அவரது வீட்டிலேயே மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கருணாநிதி உணவு எடுத்துக் கொள்வதிலும் பிரச்னை ஏற்பட்டதால், அவரது வயிற்றின் வலது மேற்பகுதியில் துளையிட்டு PEG (Percutaneous Endoscopic Gastrostomy) என்ற செயல்முறைப்படி குழாய் பொருத்தப்பட்டது. இதற்கு ’தோல்வழி இரைப்பை துளைப்புக் குழாய்’ என்று பெயர்.

அவ்வப்போது அவரை சந்திக்கச் செல்லும் தலைவர்களை பெயர் சொல்லி அழைக்க முயல்வது, புன்னகைப்பது என்று கருணாநிதியின் ரெஸ்பான்ஸ் நல்ல நிலையில் இருந்தது. இடையிடையே பேரன்களோடு விளையாடுவது என்று ரியாக்‌ஷன்களோடுதான் இருந்தார் கருணாநிதி.

கைகளைப் பற்றிக் கொள்ளும் உணர்வு!

தனக்கு நெருக்கமான சிலர் தன்னை சந்திக்க வரும்போது அவர்களது கையை இறுகப் பற்றிக் கொள்வார் கருணாநிதி. அது அவருக்கு ஒரு பாதுகாப்பான உணர்வைக் கொடுத்தது என்றார்கள் மருத்துவர்கள்.

இப்படியாக காவேரி மருத்துவமனைக்கு சில முறை சென்று உடனடியாக வீடு திரும்பியதை தவிர தனது கோபாலபுரம் இல்லத்தில்தான் மருத்துவமனை போன்ற தகவமைப்பில் சிகிச்சைகள் பெற்றார். மருத்துவர் குழுவினர் தினமும் கருணாநிதியை வந்து சந்தித்து செக்கப் செய்து கொண்டிருந்தனர்.

சில நாட்களுக்கு முன்பு நாற்காலியில் உட்கார்ந்துகொள்ள இயலாமல் மெல்ல மெல்ல படுத்துக் கொண்டே இருக்க ஆரம்பித்தார் கருணாநிதி.

கருணாநிதியின் இதயம்; வியந்த லண்டன் டாக்டர்கள்!

கடந்த ஜூலை 18 ஆம் தேதி ஸ்டாலின் லண்டனில் இருந்து திரும்பி வந்த நிலையில் கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். டிரக்கியோஸ்டோமி குழாயை மாற்றி புதிய குழாய் பொருத்தும் எளிய சிகிச்சைக்காகத்தான் அன்று மருத்துவமனை சென்றுவந்தார் கருணாநிதி.

அன்றைக்கு வீட்டுக்கு வந்த சில மணி நேரங்களில் கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. மருத்துவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தனர். சிறுநீர் தொற்று ஏற்பட்டிருப்பதும் அதனால் காய்ச்சல் வந்திருப்பதும் தெரிந்தது. அதற்குரிய சிகிச்சைகள் அளித்தனர்.

ஆனாலும் முதுமை காரணமாக அந்த சிகிச்சைகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் நிலையில் உடல் நிலை இல்லை. கண்களை மூடித் திறக்கவே சிரமப்பட்டிருக்கிறார். கண்களை பல நேரங்கள் மூடிய நிலையிலேயே இருந்திருக்கிறார். அவரது நினைவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டிருந்தது. இதுபற்றி லண்டனில் இருந்த நிபுணர்களுக்கு காவேரி மருத்துவமனையில் இருந்து கருணாநிதியின் உடல் நிலை பற்றி மருத்துவ ஆவணங்களைக் காட்டி கருத்து கேட்கப்பட்டது. அப்போது 95 வயதிலும் கருணாநிதியின் இதயம் சீராக இயங்கிக் கொண்டிருப்பதை ஆச்சரியத்தோடு குறிப்பிட்டு வியந்திருக்கிறார்கள் லண்டன் டாக்டர்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.