தமன்னா: திருமண வதந்திக்கு விளக்கம்!

தன் திருமணம் சம்பந்தமாக வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கம் அளித்துள்ளார் நடிகை தமன்னா.

மும்பையிலிருந்து வந்த தமன்னா தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்துள்ள அவர், பாகுபலி திரைப்படத்தின் மூலமாக உலகம் முழுதும் அறியப்பட்டார்.

2005ஆம் ஆண்டு ‘சாந்த் சே ரோசன் செகரா’ என்ற இந்தித் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தெலுங்கில் ‘ஸ்ரீ ’ என்ற படத்தில் நடித்தார். இவ்விரு படங்களுக்கு முன்பே தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் த்ரிஷாவின் தோழியாக அறிமுகமாகியிருப்பார். பின்னர் தமிழில் 2006ஆம் ஆண்டு கேடி படத்தின் மூலம் நடிகையானார். அதற்கடுத்தபடியாக 2007ஆம் ஆண்டில் வெளிவந்த கல்லூரி படம்தான் தமிழில் நிலைத்த நடிகையாக்கியது. தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்தாலும், சூர்யாவுடன் சேர்ந்து நடித்த அயன் படம்தான் தமிழ் ரசிகர்களை கவர்ந்தது. அதனை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தமன்னாவின் கைவசம் சீனுராமசாமியின் கண்ணே கலைமானே, தெலுங்கில் குயின் ரீமேக், சைரா நரசிம்மரெட்டி, பிரபு தேவாவின் அடுத்தப்படம் என பிசியாக இருக்கிறார். இந்நிலையில் தொடர்ந்து தன்னைப் பற்றி வரும் திருமணம் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கம் அளித்துள்ளார் தமன்னா. அதில், “ஒருநாள் நடிகர். இன்னொரு நாள் கிரிக்கெட் வீரர். இப்போது ஒரு டாக்டர். இப்படி என் திருமணம் பற்றி பல வதந்திகள். நான் காதலிப்பதாகவும் கல்யாணம் செய்துகொள்ள இருப்பதாகவும் வரும் செய்திகளை நிச்சயம் ஊக்கப்படுத்துவதில்லை. அடிப்படை ஆதாரமற்ற இவ்வாறான செய்திகள் என் சொந்த வாழ்க்கை பற்றி வெளிவருகின்றன. நான் மிக சந்தோஷமாக, தனியாக இருக்கிறேன்.

என் பெற்றோர்கள் மாப்பிளை வேட்டை நடத்தவில்லை. இப்போதைக்கு என் காதல் எல்லாம் என்னுடைய சினிமா பணிகள்தான். நான் பட ஷூட்டிங்கில் தீவிரமாக இருக்கும்போது எங்கிருந்து இது போன்ற வதந்திகள் கிளம்புகின்றன என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இது மரியாதைக் குறைவானது. நான் எப்போது அந்தப் பாதையில் செல்வேன் என்பதை நானே உலகிற்கு அறிவிப்பேன். திருமணம் புனிதமானது. எனவே, இது பற்றி இத்தனை யூகங்கள் தேவையில்லை. நான் மீண்டுமொருமுறை உறுதியாகக் கூறுகிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.