இனியொரு யுத்தத்திற்கு முகம் கொடுக்க முடியாது!

 இன்னுமொரு யுத்தத்திற்கு முகம்கொடுக்கும் சக்தி எமது தேசத்துக்கு இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் இரண்டாம் மொழியில் திறமைச் சித்தியடைந்த மாணவ, மாணவியரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் கடந்த காலங்களில் நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இன, மத, மொழி பேதம் மறந்து, அனைத்து மக்களும் ஒன்றுபட்டு நாட்டைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும்.

இன்றைய மாணவர்கள் எமது எதிர்காலத் தலைவர்களாவர். அவர்கள் எதிர்பார்க்கும் வளமுள்ள நாட்டைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய பாரிய கடமை எமது அரசாங்கத்திற்குள்ளது.

கண்டியில், அளுத்கமவில் மற்றும் சில பிரதேசங்களில் நடந்தது போன்ற வன்முறைச் சம்பவங்கள் இனியொரு போதும் நடந்துவிடக் கூடாது என்பதில் எமது அரசாங்கம் கவனமாக உள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.